பெங்களூர் அருகே ஓடும் பஸ்சில் 19 வயது பெண்ணை பலாத்காரம் செய்த டிரைவர், கிளீனர்!
பெங்களூர்: ஓடும் பஸ்சில் 19 வயது இளம் பெண் அந்த பஸ்சின் டிரைவர் மற்றும் கிளீனரால் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெங்களூரின் புறநகர் பகுதியில் நடந்துள்ளது.
பெங்களூர் கே.ஆர்.புரம் அடுத்த ஒசக்கோட்டை என்ற புறநகர் பகுதியை சேர்ந்தவர் 19வயது இளம் பெண். மருத்துவமனை ஒன்றில் பணியாற்றும் அப்பெண், நேற்று காலை பணிக்கு செல்வதற்காக பஸ் நிறுத்தத்தில் காத்திருந்தார்.

அப்போது அந்த வழியாக தனியார் மினி பஸ் ஒன்று வந்துகொண்டிருந்தது. எனவே அதை வழிமறித்து ஏறினார். ஆனால், பஸ்சுக்குள் டிரைவர் மற்றும் கிளீனரை தவிர வேறு யாரும் பயணம் செய்யவில்லை. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய டிரைவரும், கிளீனரும், ஓடும் பஸ்சிலேயே மாறி மாறி, அந்த இளம் பெண்ணை பலாத்காரம் செய்துள்ளனர்.
தங்களது நோக்கம் நிறைவேறியபிறகு, லகொன்டே கிராஸ் பகுதியில் அப்பெண்ணை பஸ்சில் இருந்து இறக்கிவிட்டு, யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டிவிட்டு சென்றனர். வலி காரணமாக மருத்துவமனையொன்றில் அந்த பெண் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கிடைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
இதையடுத்து டிரைவர் ரவி (26) மற்றும் கிளீனர் மஞ்சு (23) ஆகியோரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். டெல்லியில் ஓடும் பஸ்சில் நிர்பயா என்று பெயரிடப்பட்ட மருத்துவ மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். பெங்களூரில் ஒரு மாதம் முன்பாக, ஓடும் வேனில் ஒரு பி.பி.ஓ ஊழியர் பலாத்காரம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்விரு சம்பவங்களிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications