ஆணுறுப்பை துண்டித்தற்கு பதில் போலீசிடம் சென்றிருக்க வேண்டும்.. கேரள பெண்ணுக்கு சசிதரூர் அட்வைஸ்!
பலாத்காரம் செய்த சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த கேரள பெண்ணுக்கு முன்னாள் அமைச்சர் சசிதரூர் ஆலோசனை கூறியுள்ளார்.
டெல்லி: பலாத்காரம் செய்த சாமியாரின் ஆணுறுப்பை துண்டித்த கேரள பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில் முன்னாள் அமைச்சர் சசிதரூர், பாதிக்கப்பட்ட பெண் சட்டத்தை கையிலெடுத்தற்கு பதில் போலீஸை அணுகியிருக்க வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த சாமியார் ஹரிசுவாமி. ஒரு பெண் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது கணவரை சரிபடுத்துமாறு கூறியுள்ளார். இதையடுத்த அந்த பெண்ணின் வீட்டில் சூனியம் இருப்பதாகவும் அதனை எடுக்க வேண்டும் என்றும் கூறி சாமியார் அந்த பெண்ணின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது இருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் மகளை அந்த சாமியார் பலாத்காரம் செய்துள்ளார்.
சாமியாருக்கு பாடம்
தற்போது சட்டக்கல்லூரியில் படிக்கும் அந்த மாணவி சாமியாரின் கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியாமல் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அவரது ஆணுறுப்பை வெட்டினார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த சாமியாருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கைவிரித்த மருத்துவர்கள்
அப்போது அவரது உறுப்பு 90 சதவீதம் அறுக்கப்பட்டிருந்தது. அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் உறுப்பை மீண்டும் பொருத்த முடியாது என டாக்டர்கள் கை விரித்து விட்டனர்.
மாணவிக்கு பாராட்டு
இதைத்தொடர்ந்து அந்த பெண்ணுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். கேரள முதல்வர் பினராயி விஜயனும் இளம்பெண்ணின் துணிச்சலை பாராட்டி உள்ளார்.
சசிதரூர் அட்வைஸ்
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூர் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். சாமியாரால் பாதிக்கப்பட்ட அந்த பெண் சட்டத்தை கையிலெடுத்ததற்கு பதில் போலீசாரிடம் சென்றிருக்கலாம் என அவர் ஆலோசனை கூறியுள்ளார்.