'அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிக்கு ஏற்றப்படும் குளுக்கோசை ருசிபார்க்கும் எலி'. . சத்தீஸ்காரில் அவலம்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கார் மாநிலத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில், நோயாளிக்கு ஏறிக்கொண்டு இருந்த குளுக்கோஷை எலி ஒன்று ருசிபார்க்கும் வீடியோ சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் ஏழை எளிய மக்கள் தங்கள் நோயை தீர்க்க நாடிச்செல்லும் இடமாக இருப்பது அரசு மருத்துவமனைதான்.
தனியார் மருத்துவமனைகளில் கட்டணம் அதிகம் இருக்கும் என்பதால், எப்போதும், ஏழை எளிய மக்கள் நோய்வாய்ப்பட்டால் அரசு மருத்துவமனைகளையே அதிகம் நாடிச் செல்கின்றனர்.

மத்திய பிரதேசத்தில்
நாட்டில் உள்ள பல அரசு மருத்துவமனைகள் சிறப்பான சேவைகள் அளித்து வந்தாலும், அதற்கு மாற்றாக அலட்சியமாக செயல்படும் ஒருசில அரசு மருத்துவமனைகளும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. குறிப்பாக வடமாநிலங்களில் இத்தகைய நிலை அதிகமாக காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட மத்திய பிரதேசத்தில் ஒரே ஊசியைக் கொண்டு 30 மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

டிரெண்ட் ஆன வீடியோ
இந்த நிலையில், சத்தீஸ்காரில் உள்ள பலிராம் காஷ்யாப் நினைவு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், நோயாளிக்கு ஏற்றிக்கொண்டு இருக்கும் குளுக்கோஷ் பாட்டிலை கடித்து அதில் உள்ள குளுக்கோசை எலி ஒன்று ருசி பார்த்து சென்ற வீடியோ பெரும் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது. சத்தீஸ்கார் மாநிலம் ஜக்தால்பூர் நகரத்தில் உள்ளது இந்த மருத்துவமனை. மருத்துவமனையின் பொது வார்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளியின் உறவினர் ஒருவர் தான் இந்தக் காட்சிகளை தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்டார். தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆகியுள்ளது.

குளுக்கோஷ் குடிக்கும் எலி
மருத்துவமனையின் அலட்சியம் குறித்து பலரும் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். சில நெட்டிசன்கள் இங்கே போனால் நோய் குணம் ஆகாது, நோய்தான் வரும் எனவும் கடும் கோபத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சமூக வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோவில், படுக்கையில் நோயாளி ஒருவர் படுத்து உள்ளார். அவரது இடது கையில் குளுக்கோஷ் ஏற்றப்பட்டு வருகிறது. அப்போது, குளுக்கோஸ் பொருத்தப்பட்டு இருக்கும் கம்பி மீது வேகமாக ஏறும் எலி ஒன்று, குளுக்கோஷ் பாட்டிலை கடித்து அதில் உள்ள குளுக்கோஷை குடிக்கிறது. பிறகு அங்கிருந்து ஓடுகிறது. உடனே வரும் மற்றுமொரு எலி அதே வேலையை செய்கிறது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து, இது குறித்து மருத்துவமனை டீனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

விசாரணைக்கு பிறகே சொல்ல முடியும்
இதற்கு பதிலளிக்க மறுத்த மருத்துவமனை டீன், உரிய விசாரணைக்கு பிறகே இது குறித்து எதுவும் சொல்ல முடியும் என்றார். இருந்தாலும், மருத்துவமனை கண்கணிப்பாளர், மருத்துவர் டிகு சின்கா, மருத்துவமனையில் எலிகள் தொல்லை அதிகம் இருப்பதை ஒப்புக்கொண்டார். மருத்துவமனையில் பராமரிப்பு தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இதுவரை 1,200க்கும் மேற்பட்ட எலிகளை பிடித்து இருப்பதாகவும் ஆனால், இன்னமும் எலிகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது மருத்துவமனையில் ஊழியர்கள் பற்றாக்குறை அதிகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications