பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பினார், பாஜக தலைமை அனுமதிக்கவில்லை: அமைச்சர்
பனாஜி: கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தனது பதவியை ராஜினாமா செய்ய விரும்பியதாகவும், பாஜக தலைமை அதை அனுமதிக்கவில்லை என்றும் கோவா விவசாயத் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் தெரிவித்துள்ளார்.
உடல் நலம் பாதிக்கப்பட்ட கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் கடந்த மாதம் 14ம் தேதி டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய அவர் ஓய்வு எடுத்து வருகிறார்.
இந்நிலையில் கோவா மாநில விவசாயத் துறை அமைச்சர் விஜய் சர்தேசாய் கூறியதாவது,
முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய விரும்பினார் மனோகர் பாரிக்கர். விநாயகர் சதுர்த்தியின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோதே தன்னிடம் உள்ள துறைகளை பிற அமைச்சர்களிடம் கொடுக்க விரும்பினார். ஆனால் நிறைய விஷயங்கள் நடந்துவிட்டது. பாஜக தலைமை தலையிட்டு அவரை தடுத்துவிட்டது.
பதவியை ராஜினாமா செய்வது அவர் கையில் இல்லை. முதல்வரின் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அரசு நடக்கும் விதத்தில் அதன் தாக்கம் உள்ளது என்றார்.