தென்னகத்தை நோக்கி நகரும் மமதா புயல்...கோவா மாஜி காங். தலைவர் திரிணாமுல் காங்.-ல் இணைகிறார்!
பனாஜி: கோவா மாநிலா காங்கிரஸ் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான லூய்சின்ஹோ பலேரோ இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் லூய்சின்ஹோ பலேரோ இணைய உள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என்ற தனிக்கட்சியை தொடங்கினார். மேற்கு வங்கம் மாநிலம் இடதுசாரிகள் கோட்டை என்பதை தகர்த்து இடதுசாரிகளே இல்லாத நிலையை உருவாக்கியவர் மமதா பானர்ஜி.
மேற்கு வங்கத்தில் 3-வது முறையாக மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி தொடருகிறது. மேற்கு வங்கத்தை தொடர்ந்து வடகிழக்கு மாநிலங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி விரிவாக்கம் செய்யப்பட்டது. இருப்பினும் வட, தென்னிந்திய மாநிலங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கால்பதிக்க ஆர்வம் காட்டவில்லை.

கோவாவின் லூய்சின்ஹோ பலேரோ
இந்நிலையில் தென்னகத்தை நோக்கி திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தமது பயணத்தை தொடங்க உள்ளது. கோவா மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமான லூய்சின்ஹோ பலேரோ அக்கட்சியில் கடும் அதிருப்தியில் இருந்தார். அத்துடன் கோவா மாநிலத்துக்கு மமதா பானர்ஜி போன்ற ஒரு தலைவர் தேவை எனவும் பிரதமர் மோடியின் அதிகாரங்களுக்கு கடும் சவாலாக இருந்தவர் மம்தா பானர்ஜி. மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி, அமித்ஷா 200க்கும் அதிகமான தேர்தல் பிரசார கூட்டங்களையும் நடத்தியும் மமதாவின் பார்முலாதான் வென்றது என்றார் பலேரோ. இதனால் கோவா காங்கிரஸில் சலசலப்பு ஏற்பட்டது.

எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த பலேரோ
மமதா பானர்ஜியை புகழ்ந்து பலேரோ பேசிய சில மணிநேரங்களிலேயே தமது எம்.எல்.ஏ. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார். இதனைத் தொடர்ந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் பலேரோ அதிகாரப்பூர்வமாக இணையக் கூடும் என கூறப்படுகிறது. மேலும் பலேராவை திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் நேரில் சந்தித்து பேச பனாஜி செல்ல உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மமதாவின் ஆட்டம்
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவின் மிக கடுமையான பிரசாரத்துக்கு ஒற்றை மனுஷியாக நின்று ஈடு கொடுத்து அசரடித்தவர் மமதா பானர்ஜி. அமலாக்கத்துறை, சிபிஐ என அத்தனை விசாரணை அமைப்புகளும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீது இன்னமும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஆனாலும் மேற்கு வங்க மாநிலத்தையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியையும் அசைக்க முடியாத இரும்புக் கோட்டையாக வைத்திருக்கிறார் மமதா பானர்ஜி.

பாஜக எம்.எல்.ஏக்கள் தாவல்
அத்துடன் பாரதிய ஜனதா கட்சியின் 4 எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தாவ வைத்திருக்கிறார் மமதா. திரிபுராவில் பாஜக அரசுக்கு ஆட்டம் காட்டும் வகையில் அக்கட்சியின் எம்.எல்.ஏக்களையும் திரிணாமுலுக்கு தாவ வைப்பதிலும் மமதா கட்சி மும்முரமாக இருக்கிறது. இந்த நிலையில் தென்னகத்தின் கதவுகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காக கோவாவின் லூய்சின்ஹோ பலேரோ திறந்துவைக்க தயாராகி இருப்பது அக்கட்சியினருக்கு பெரும் உற்சாகமாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications