நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு.. 19 வருடங்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது
காந்திநகர்: நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 19 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கரசேவர்கள் வந்த இரு பெட்டிகளில் மர்மநபர்கள் தீவைத்தனர். இந்த சம்பவத்தில், 59 கரசேவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய அளவில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் அதிகம் முஸ்லீம்கள் பாதிக்கப்பட்டனர்.
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் 31 பேரைக் குற்றவாளிகள் என தீர்ப்பளித்திருந்தது. இதில் 20 பேர் ஆயுள் தண்டனையும், 11 பேருக்கு மரண தண்டனையும் பெற்றனர். 11 பேரின் மரண தண்டனையையும் குஜராத் உயர் நீதிமன்றம் ஆயுள் தண்டனையாகக் குறைத்தது.
இந்த வழக்கில் சிலர் இன்னும் தேடப்பட்டு வருகிறார்கள். அதில் முக்கியமானவரான ரபீக் ஹூசைன் பதுக் இப்போது கைதாகியுள்ளார். சதித் திட்டம் தீட்டிய குழுவில் ஹூசைனும் இருந்துள்ளார் என்பது குற்றச்சாட்டாகும்.
இவர் மீது கலவரத்தைத் தூண்டுதல், கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை கோத்ராவுக்கு வந்து சென்று தப்பிச்செல்ல முயன்றதாகவும் அதுகுறித்து தவல் அறிந்து ரபீக் ஹுசைன் கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.
11 வயது மாணவி கர்ப்பம்... பாட்னா பள்ளி முதல்வருக்கு மரண தண்டனை.. என்னத்த சொல்ல
இதுபற்றி எஸ்.பி. லீனா பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, சபர்மதி ரெயில் படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளின் பெயர்கள் கோத்ரா ரயில்வே காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அவர்களில் முக்கிய குற்றவாளிதான் ரபீக் ஹுசைன், கோத்ரா நகர சிறப்பு அதிரடி படையினர் கைது செய்துள்ளனர். பல்வேறு கட்டுமான இடங்களில் சின்ன சின்ன வேலைகளில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.