ஆஆ.. என்ன இது? 142 ஆண்டுகளுக்கு பின் தென்பட்ட அதிசய 'தங்க' பாம்பு! பார்த்ததும் ஆடிப்போன ஆய்வாளர்கள்
வயநாடு: உலக அளவில் மிகவும் மர்மமான பாம்பாக அறியப்படும் 'தங்கக் கவசவாலன்' பாம்பு மண்ணுக்குள் இருந்து வெளியே வந்ததை ஆய்வாளர்கள் பார்த்து பிரமித்துப் போயினர்.
ஏனெனில், இந்த வகை பாம்பு 142 ஆண்டுகளுக்கு பின்னர், இப்போதுதான் மனிதர்களின் கண்ணில் சிக்கியுள்ளது. இந்த பாம்பை பிடித்து தற்போது ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
மற்ற பாம்புகளை போல இல்லாமல் பார்ப்பதற்கே மிகவும் அழகாக தங்கத்தை போல ஜொலிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மர்மமான பாம்புகள்..
உலகில் இதுவரை 3,500-க்கும் மேற்பட்ட பாம்பு வகைகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றில் ராஜநாகம், நல்ல பாம்பு, கருநாகம், கட்டுவிரியன், சாரைப் பாம்பு போன்றவை தான் நமக்கு பெரும்பாலும் தெரியும். ஆனால் நமக்கு தெரியாத ஆயிரக்கணக்கான பாம்பு வகைகள் இந்த உலகில் இருக்கின்றன. பாம்புகளில் பெரும்பாலானவை வெளியே நடமாடக்கூடியவை தான். ஆனால், மிகச் சில பாம்புகளுக்கு இதில் இருந்து விலக்கு உள்ளது. அதாவது, இந்த பாம்புகள் பெரும்பாலும் எந்த உயிரினத்தின் கண்ணிலும், குறிப்பாக மனிதர்கள் கண்ணில் சிக்கவே சிக்காது. மிக மிக அரிதாகவே அந்த பாம்புகளை நாம் பார்க்க முடியும். இதுபோன்ற பாம்புகளையே மர்மமான பாம்புகள் என ஆராய்ச்சியாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர்.

அரிதிலும் அரிதான 'தங்கக் கவசவாலன்'
அதுபோன்ற மர்மமான பாம்பு வகையில் ஒன்றுதான் 'தங்கக் கவசவாலன்'. மழைக்காடுகளில் மட்டுமே இந்த வகை பாம்புகள் இந்தியாவிலும், இலங்கையில் மட்டுமே இருக்கின்றன. இந்த பாம்பை பார்ப்பது என்பது அரிதிலும் அரிது. ஏனெனில், மண்ணுக்குள் பல அடி ஆழத்தில்தான் இந்த பாம்பு வசிக்கும். இரவு நேரங்களில் மட்டுமே இரை தேட இவை வெளியே வரும். அதிலும் நள்ளிரவு நேரத்தில் மிகவும் இருட்டாக இருக்கும் பகுதியில்தான் இவை இரை தேடும். மிகவும் கூர்மையான பார்வைத் திறன் கொண்டிருப்பதால் இருட்டிலும் இந்த பாம்பு எளிதாக இரையை பிடித்துவிடும்.

142 ஆண்டுகளுக்கு முன்பு..
1880-ம் ஆண்டு சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட பகுதியாக கேரளா இருந்த போது, வயநாடு பகுதியில் உயிரியல் அறிஞர் ரிச்சர்ட் ஹென்றி பெட்டோம் என்பவர் இந்த தங்கக் கவசவாலன் பாம்பை முதன்முதலில் பார்த்தார். அந்த பாம்பு குறித்த தகவல்களையும் அவர் சேகரித்து ஆவணப்படுத்தினார். 'கோல்டன் ஷீல்டுடெய்ல்' என்று இந்த பாம்பை ஆங்கிலத்தில் அழைப்பார்கள். மிகவும் மர்மமாக இருக்கக்கூடிய 'ஷீல்டுடெய்ல்' பாம்பு குடும்பத்தை இது சேர்ந்தது. அந்த ஒரு பாம்புக்கு பிறகு, பல வருடங்களாக பாம்பு ஆராய்ச்சியாளர்கள் அந்தப் பகுதியில் சல்லடை போட்டு தேடியும் தங்கக் கவசவாலன் பாம்பை கண்டுபிடிக்க முடியவில்லை.

வயநாட்டில் பிடிபட்ட 'தங்கக் கவசவாலன்'
இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வயநாட்டில் உல்ள செம்பரா மலைப்பகுதியில் உயிரியல் ஆராய்ச்சியாளர்கள் கண்ணில் இந்த பாம்பு தென்பட்டது. முதலில் இந்த பாம்பை பார்த்து பிரமித்து போன ஆராய்ச்சியாளர்கள், மிகவும் கஷ்டப்பட்டு அந்த பாம்பை பிடித்தனர். மற்ற பாம்புகளை போல இல்லாமல் இந்த பாம்பின் தோல் தங்க நிறத்தில் இருக்கும் எனக் கூறப்படுகிறது. சூரிய வெளிச்சத்தில் பார்த்த்தால் தங்கத்தை போல இந்த பாம்பு தகதகவென ஜொலிக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, இந்த பாம்பின் வால்பகுதியானது தங்கத்தை உருக்கி வைத்தது போல காணப்படும். அதனால்தான் இந்த பாம்புக்கு தங்கக் கவசவாலன் எனப் பெயர் வந்துள்ளது. சுமார் 142 ஆண்டுகளுக்கு பிறகு இந்த வகை பாம்பு மனிதர்களின் கண்ணில் சிக்கியதோடு மட்டுமல்லாமல் பிடிபட்டும் இருக்கிறது. இது பாம்பு ஆராய்ச்சியில் ஒரு மைல்கல் என உயிரியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications