மிசோரம் சட்டசபை தேர்தல்: நோட்டாவுக்காக காத்திருக்கும் கூர்க்கா வாக்காளர்கள்!
ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் தங்களது கோரிக்கையை மாநில அரசுகள் நிறைவேற்றாததைக் கண்டித்து தேர்தலின் போது நோட்டாவை (NOTA) பயன்படுத்த கூர்க்கா வாக்காளர்கள் முடிவு செய்துள்ளனர்.
தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பது அரசியல் சாசனம் அளித்திருக்கும் உரிமை. ஆகையால் தேர்தலின் போது வாக்குப் பதிவு இயந்திரத்திலேயே எவருக்கும் வாக்களிக்க உரிமை இல்லை என்பதற்கான பட்டனை பொருத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதையடுத்து தேர்தலில் எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை (நோட்டா) என்ற பொத்தானை பொருத்தவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. தற்போது நடைபெற்று வரும் 5 மாநில சட்டசபை தேர்தல்களில் நாட்டில் முதல் முறையாக நோட்டா பட்டன் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

மிசோரமில் 25-ந் தேதி தேர்தல்
தற்போது தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மிசோரமும் ஒன்று. இம்மாநிலத்தில் மொத்தம் 40 சட்டசபை தொகுதிகள் உள்ளன. மிசோரம் சட்டசபைக்கு வரும் 25--ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

25 ஆயிரம் கூர்க்காக்கள்
இம்மாநிலத்தில் மொத்தம் 25 ஆயிரம் கூர்க்கா மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் 9,771 பேர் வாக்களார்கள்.

23 தொகுதிகளில் கணிசமான வாக்காளர்கள்
மாநிலத்தின் 40 சட்டசபை தொகுதிகளில் 23-ல் கணிசமான அளவு இம்மக்கள் வாழ்கின்றனர்.

எம்பிசிக்கு மாற்ற கோரிக்கை
இவர்கள் தங்களை ஓபிசி பட்டியலில் இருந்து எம்.பி.சி பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்று நீண்டகாலம் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் தங்களது கோரிக்கையை எந்த ஒரு மாநில அரசும் நிறைவேற்றவில்லை என்பது கூர்க்காக்களின் ஆதங்கம்.

நோட்டாதான் வழி..
இதனால் இம்முறை வாக்குப் பதிவின் போது எவருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற 'நோட்டா' முறையை பயன்படுத்த கூர்க்கா இன மக்கள் தீர்மானித்துள்ளனர். அனைத்து கூர்க்கா வாக்காளர்களும் நோட்டா பட்டனை பயன்படுத்துவது குறித்து விளக்க வகுப்புகளும் கூட நடத்தப்பட்டு வருகிறது.

பல மாநிலங்களில் எதிரொலிக்குமே..
அப்படி கூர்க்கா இன வாக்காளர்கள் 9,771 பேரும் ஒட்டுமொத்தமாக நோட்டாவை பயன்படுத்தினால் பரபரப்பு ஏற்படும். இதர மாநிலங்களிலும் பல்வேறு கோரிக்கைகளுக்காக போராடி வரும் மக்களிடையே அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் பார்வையாளர்களின் கருத்து.












Click it and Unblock the Notifications