”பரவாயில்லை அழிச்சுக்கோங்க”- எதிர்ப்பால் வாட்ஸ் ஆப் கொள்கையிலிருந்து அரசு அந்தர் பல்டி!
டெல்லி: இணைய தள செயலியான வாட்ஸப் செய்திகளை 90 நாட்களுக்கு அழிக்க கூடாது என்ற கொள்கையை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்திருந்த நிலையில் இதற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்ததால் தற்போது வாட்ஸப் மற்றும் சமூக வலைதளங்களுக்கு விலக்கு அளித்துள்ளது.
வாட்ஸப் பயன்பாட்டிற்கு புதிய குறியீட்டு கொள்கையை மத்திய அரசு கொண்டுவர முடிவு செய்தது மத்திய அரசு. இதன்படி 90 நாட்களுக்கு தகவல்களை அழிக்கக்கூடாது என மத்திய அரசு வரைவு கொள்கையில் தெரிவித்திருந்தது. இது தொடர்பாக மக்கள் தங்கள் தகவல்களை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இணைய தள பயன்பாட்டில் தற்போது பரவலாக பயன்படுத்தப்பட்டு வருவது வாட்ஸப் செயலி ஆகும். மற்ற செயலிகளை விட வாட்ஸப் மூலம் மொபைல் வாயிலாக இ மெயில் தகவல்கள், பேட்டோ, வீடியோ ஆகியவை நொடிப்பொழுதில் அனுப்பி வைக்கப்பட்டு அவை வைரலாக பரவி விடுகிறது.
இது போன்ற டேட்டாக்கள் பல்வேறு குற்றச்செயல்களை கண்டுபிடிப்பதற்கு முக்கிய ஆதாரமாகவும் பயன்படுகிறது. இதனையடுத்து வாட்ஸப் செயலி மூலம் அனுப்பப்படும் தகவல்கள் மற்றும் போட்டோ , வீடியோ உள்ளிட்ட டேட்டாக்களை பாதுகாப்பு கருதி 90 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் எனவும், அவ்வாறு சேமிக்காமல் டேட்டாக்களை அழித்துவிட்டால் அது சட்டவிரோதம் என அறிவிக்க வகை செய்யும் புதிய தேசிய வரைவு கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு ஆலோசித்து மக்களிடம் கருத்து கேட்டிருந்தது.
இந்நிலையில் இந்த புதிய கொள்கையினால் மக்களுடைய அந்தரங்கத்தில் நுழைய முயற்சிக்கின்றது மத்திய அரசு என்ற சர்ச்சை எழுந்ததுடன், மக்கள் மத்தியில் எதிர்ப்பும் அதிகரித்துள்ளது. இதனால் இக்கொள்கையிலிருந்து பின்வாங்க முடிவு செய்துள்ள மத்திய அரசின் தகவல் தொழில்நுட்பத் துறை வாட்ஸப், டுவிட்டர் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களுக்கு விலக்கு அளித்துள்ளது.