டெல்லியில் ஆட்சியமைக்க நெருங்கும் கெடு... மௌனம் காக்கும் கட்சிகள்: ஜனாதிபதி ஆட்சி அமல்?
டெல்லி: டெல்லியில் புதிய அரசு அமைய வரும் புதன்கிழமை வரை மட்டுமே அவகாசம் உள்ள நிலையில் கட்சிகள் தொடர்ந்து மௌனம் காப்பதால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமையும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
நடந்து முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில், எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க 36 எம்எல்ஏக்கள் தேவை. பாஜக கூட்டணி 32 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும், சுயேட்சை 2 இடங்களையும் பிடித்தனர்.
32 இடங்களை பிடித்த பாஜக ஆட்சி அமைக்க மேலும் 4 இடங்கள் தேவை. சுயேட்சைகள் தனது ஆதரவைத் தெரிவித்தாலும் கூட அது பாஜக ஆட்சியில் அமர போதுமானதாக இருக்காது. எனவே, அக்கட்சி ஆட்சி அமைக்க மறுத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து, அடுத்த இடத்தில் 28 இடங்களை பிடித்த ஆம் ஆத்மி கட்சிக்கு துணை நிலை ஆளுநர் அழைப்பு விடுத்தார். ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளிப்பதாக கூறியிருந்தது.
ஆனால் ஆம் ஆத்மி கட்சியோ ஆட்சி அமைக்க 18 நிபந்தனைகளை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு விதித்தது. மேலும், தங்களுக்கு 10 நாள் அவகாசமும் கேட்டது. ஆனால், அதற்குப் பதிலளிக்காமல் தொடர்ந்து காங்கிரஸும், பாஜகவும் அமைதி காத்து வருகின்றன.
இந்நிலையில், டெல்லியில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன்வரவில்லை என்றும், ஆகவே டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்து துணை நிலை ஆளுநர் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications