ஒரு ரூபாய் நோட்டை அச்சடிக்க மத்திய அரசுக்கு "ரைட்ஸ்" உண்டு: சட்ட அமைச்சகம் விளக்கம்
டெல்லி: ஒரு ரூபாய் நோட்டுக்களை அச்சடிக்க மத்திய அரசுக்கு முழு அதிகாரம் உள்ளது என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்படலாம் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தாள் வடிவத்தில் இருந்த ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் நோட்டுக்கள் நாணய வடிவில் மாற்றப்பட்டன. ரூபாய் நோட்டுத் தயாரிப்பை விட நாணய வடிவத்திற்கு செலவு அதிகம் என்ற போதிலும், அவற்றின் வாழ்நாளைக் கருத்தில் கொண்டு இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டது. விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரலாம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சட்ட அமைச்சகம் அளித்துள்ள விளக்கமொன்றின் படி மீண்டும் ஒரு ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு விடப்படலாம் எனத் தெரிகிறது.

பணத்தின் வடிவம்...
பொதுவாக ரூ.2 முதல் ரூ.10,000 வரையிலான பணம் எந்த வடிவத்தில் வரவேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் மத்திய ரிசர்வ் வங்கியிடம் உள்ளது.

அதிகாரமில்லை....
அதேசமயத்தில், ரூ.1 நோட்டுக்கள் மட்டுமின்றி நாணய வடிவத்தில் ரூ.1000 வரை கொண்டுவர மத்திய அரசுக்கு அதிகாரமுள்ளது. ஆனால் நாணயச் சட்டத்தின் 2ஆம் பிரிவு நீக்கப்பட்ட பிறகு ரூ.1 தாள்களை அச்சடிக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய ரிசர்வ் வங்கி கருதுகிறது.

தடையில்லை...
இதற்கு பதிலளிக்கும் வகையில் சட்ட அமைச்சகம் அளித்துள்ள விளக்கத்தில், ‘2011 நாணயமாக்கச் சட்டம் மத்திய அரசு ரூ.1 தாள்களை அச்சிடத் தடையில்லை எனத் தெரிவித்துள்ளது.

ஒரு ரூபாய் நோட்டுக்கள்...
2011 நாணயமாக்கச் சட்டத்தின் பிரிவு 4, மத்திய அரசு ரூ.1000 வரையிலும் நாணயமாக வெளியிட அதிகாரம் படைத்தது. நாணயம் பற்றிய அந்தச் சட்ட விளக்கத்தின் படி மத்திய அரசு ரூ.1 நோட்டுக்களை அச்சடிக்கலாம் என்று உறுதி படக் கூறுகின்றது.

எந்த வடிவத்திலும்...
மேலும், இந்தச் சட்டத்தில் ரூபாயானது தாள்கள் அல்லது நாணயங்கள் என எந்த வடிவத்திலும் இருக்கலாம் என்றே இந்தச் சட்டம் தெரிவிக்கின்றது.

ரிசர்வ் வங்கிக்கு அதிகாரமில்லை...
1940ஆம் ஆண்டு நாணயச் சட்டம் ரத்து செய்யப்பட்டதையடுத்து நாணயச் சட்ட 2011 உருவாக்கப்படும் போதே நாணயம் என்ற பிரிவில் ரூ.1 தாள்களையும் உள்ளடக்குமாறு சட்டப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மத்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934-ன் படி ரூ.1 தாள்களை அச்சடிக்க மத்திய ரிசர்வ் வங்கிக்கு அதிகாரம் கிடையாது என்று கூறியுள்ளது சட்ட அமைச்சகம்.












Click it and Unblock the Notifications