பீகார், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்: ராஜ்நாத்சிங்
டெல்லி: இன்னும் சில வாரங்களில் 7 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் ஆளுநர் சிவராஜ் பாட்டீலின் பதவிக்காலம் வரும் 21-ம் தேதியும், ஹிமாச்சல் ஆளுநர் ஊர்மிளா சிங்கின் பதவிக்காலம் வரும் 24-ம் தேதியும் நிறைவடைய உள்ள நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் இவ்வாறு கூறியுள்ளார்.
பீகார், அசாம், மேகாலயா, திரிபுரா ஆகிய மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டியுள்ளது.
கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற ஒருசில வாரங்களிலேயே கேரள ஆளுநர் ஷீலா தீட்ஷித், மேற்குவங்க ஆளுநர் எம்.கே. நாராயணன், நாகாலாந்து ஆளுநர் அஷ்வனி குமார், உத்தரப் பிரதேச ஆளுநர் பி.எல். ஜோஷி, கோவா ஆளுநர் வான்சோ, சத்தீஸ்கர் ஆளுநர் சேகர்தத், மணிப்பூர் ஆளுநர் துகால் ஆகியோர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் அப்போது சர்ச்சையை ஏற்படுத்தியது.