சாதிவாரி கணக்கெடுப்பை வெளியிடாமல் 'ஜகா' வாங்கிய மத்திய அரசு... சரிபார்க்க குழு அமைத்தது!
டெல்லி: சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு வெளியிட வேண்டும் என்று பல்வேறு கட்சிகள், அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் இந்த சாதிவாரி கணக்கு விவரங்களை சரி பார்க்க ஒரு குழு அமைப்பதாக கூறியுள்ளார் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி. இதனால் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரத்தை மத்திய அரசு உடனே வெளியிடாது என்பது உறுதியாகி உள்ளது.
கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது 2011-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை மத்திய அரசு அண்மையில் வெளியிட்டது. மக்களின் சமூக பொருளாதார விவரங்களை வெளியிட்ட அரசு, சாதி வாரியான மக்கள் தொகை பற்றிய விவரங்களை வெளியிடவில்லை.

இதை வெளியிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகள் வற்புறுத்தி உள்ளன. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டம் முடிந்ததும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மக்கள் தொகை கணக்கெடுப்பில் சேகரிக்கப்பட்ட சாதி வாரியான கணக்கெடுப்பு உள்ளிட்ட விவரங்கள் மாநில அரசுகளின் பார்வைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. ஆனால் பெரும்பாலான மாநில அரசுகள் அதுபற்றிய தங்கள் பதிலை இன்னும் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கவில்லை.
சமூக, பொருளாதார, சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிய விவரங்களை சரிபார்க்க நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில் குழு ஒன்றை அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது. மாநில அரசுகள் அனுப்பும் பதிலை இந்த குழு பரிசீலிக்கும்.
அனைத்து விவரங்களும் பரிசீலிக்கப்பட்டு, பணிகள் முடிந்த பின் சாதி வாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரங்களை உரிய நேரத்தில் மத்திய அரசு வெளியிடும்.
இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.












Click it and Unblock the Notifications