தொடரும் ராகுல் அதிரடி! லோக்சபாவில் 'நெட் நியூட்டிராலிட்டி' குறித்து ஆவேசம்! மத்திய அரசு மீது சாடல்!
டெல்லி: இளைஞர்கள் வசம் இருக்கும் இன்டர்நெட்டை பிடுங்கி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கிறது மத்திய அரசு என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதலாவது கட்ட கூட்டத்தில் பங்கேற்காமல் சுமார் 2 மாதம் ஓய்வெடுக்கப் போனார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இதனால் கடுமையாக கிண்டலடிக்கப்பட்டார் அவர்.
அவர் நாடு திரும்பியதும் நாடாளுமன்ற கூட்டங்களில் அதிரடியைக் காட்டி வருகிறார்.. கடந்த திங்கள்கிழமையன்று நில ஆர்ஜித மசோதா விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு மத்திய அரசு வெளுத்துக் கட்டினார்.

இதேபோல் இன்று நாடாளுமன்றத்துக்குள் செல்லும் முன்னரே, இன்று நெட் நியூட்டிராலிட்டி குறித்து பேச இருக்கிறேன் ... கேளுங்கள் என்று செய்தியாளர்களிடம் கூறிவிட்டுதான் ராகுல் சென்றார்.
லோக்சபாவில் இன்று காலை சபை தொடங்கியதும் ராகுல் நெட் நியூட்டிராலிட்டி குறித்து விவாதிக்க கோரி நோட்டீஸ் அளிக்கப்பட்டது. அப்போது பேசிய ராகுல் காந்தி, நான் நெட் நியூட்ராலிட்டி தொடர்பாக பேச விரும்புகிறேன். இது குறித்து கேள்வி நேரத்தை ஒத்திவைத்து விட்டு விவாதிக்க வேண்டும்.
பெரிய நிறுவனங்கள் இடையே இன்டர்நெட்டை விற்பனை செய்ய மத்திய அரசு விரும்புகிறது. நெட் நியூட்ராலிட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோடிக்கணக்கானோர் போராடுகின்றனர். ஆனால் அரசு இன்டர்நெட்டை பிடுங்கி கார்ப்ரேட் நிறுவனங்கள் கையில் கொடுக்க முயற்சி செய்கிறது.
நெட் நியூட்ராலிட்டி விவகாரத்தில் சட்டத்தை மாற்றுங்கள். இல்லை எனில் புதிய சட்டத்தை உருவாக்குங்கள் என்றார்.
ராகுல் காந்தியின் இந்த குற்றச்சாட்டுக்கு மத்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பதிலளித்து பேசுகையில், இணையத்தில் அனைவருக்கும் சமஉரிமை கிடைப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்பதை இந்த சபையில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். அரசு எந்த ஒரு கார்ப்ரேட் நிறுவனத்திடம் இருந்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி வரவில்லை என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எல்லோரும் இன்டர்நெட் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். டிராய் சட்டத்தின்படி டிராய் தனது பரிந்துரையை வழங்க முடியும்.
ட்விட்டர் சேவையை காங்கிரஸ் தலைமையிலான அரசு ஏன்? எப்படி? தடுத்தது என்பதை விளக்க வேண்டும். உலக அளவில் பயன்படுத்தப்படும் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி மதிப்பு மிக்கவராக உள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications