மேற்கு வங்க சட்டசபையை கலைத்த ஆளுநர் ரவி.. ராஜினாமா செய்யமாட்டேன் என மம்தா கூறிய நிலையில் அதிரடி
கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன் எனக் கூறி வருகிறார். இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி, அம்மாநில சட்டசபையைக் கலைத்து உத்தரவிட்டுள்ளார்.
மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், அம்மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கடும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. பாஜக 207 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளது. தேர்தல் முடிவு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் மம்தா பானர்ஜி பேசுகையில், "நாங்கள் மக்களின் தீர்ப்பால் தோற்கடிக்கப்படவில்லை, மாறாக ஒரு சதியால் தோற்கடிக்கப்பட்டோம். எனவே, எனது ராஜினாமா என்ற கேள்விக்கே இடமில்லை.

நாங்கள் தோற்கவில்லை, வாக்குகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணிக்கையில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. கிட்டத்தட்ட 100 இடங்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. நாங்கள் பாஜகவுடன் போராடவில்லை, பாஜகவுக்காக பணியாற்றிய தேர்தல் ஆணையத்துடன் போராடினோம். வரலாற்றில் இது ஒரு கருப்பு அத்தியாயம்." எனக் கூறினார்.
இதனால் மேற்கு வங்கத்தில் அடுத்து என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கிடையே, மேற்கு வங்கத்தில் ஆட்சி அமைக்க பாஜக தயாராகி வருகிறது. மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, பபானிபூர் தொகுதியில் மம்தா பானர்ஜியை தோற்கடித்திருந்தார். அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், மேற்கு வங்க ஆளுநர் ஆர்.என். ரவி, மேற்கு வங்க சட்டமன்றத்தை முறைப்படி கலைத்துள்ளார். இதன்மூலம், அம்மாநில முதலமைச்சராக மம்தா பானர்ஜியின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துள்ளது. இந்திய அரசியலமைப்பின் 174-வது பிரிவின் 2-வது உட்பிரிவின் கீழ் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, இன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.
"மேற்கு வங்க சட்டமன்றத்தை 2026 மே 7 ஆம் தேதி முதல் கலைக்கிறேன்" என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் வெற்றியைத் தொடர்ந்து மம்தா பானர்ஜி பதவி விலக மறுத்ததால் என்ன நடக்கும் என்ற பரபரப்புக்கு மத்தியில், அங்கு அரசு கலைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications