டெல்லியில் இருந்து நேரடியாக மும்பை சென்றடைந்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்
டெல்லியில் இருந்து தமிழகம் வருவார் என எதிர்பார்த்த நிலையில், நேரடியாக மும்பை சென்றடைந்தார் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ்
டெல்லி: தமிழக முதல்வராக இன்று சசிகலா பதவியேற்க உள்ளதாக தகவல் பரவி வந்தநிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பை சென்றடைந்தார். இதனால் சசிகலா பதவியேற்க இருந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக சட்டப்பேரவை குழு தலைவராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் சசிகலா ஞாயிற்றுக்கிழமை தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான கடிதத்தையும், பதவி ஏற்கும் அமைச்சரவை பட்டியலையும் சசிகலா ஆளுநரிடம் வழங்கி இருந்தார்.
இதன் பின்னர் சசிகலா முதல்வராக பதவியேற்கும் விழாவிற்காக ஏற்பாடுகள் சென்னை பல்கலைகழக நூற்றாண்டு விழா அரங்கில் தீவிரமாக நடந்து வந்தன. இந்நிலையில், நேற்று மாலை ஊட்டி சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு டெல்லி சென்ற தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், அட்டர்னி ஜெனரலுடன் ஆலோசனை நடத்தியாக தகவல்கள் தெரிவித்தன.
இந்நிலையில் டெல்லியில் இருந்து சென்னை வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் டெல்லியில் இருந்து நேரடியாக மும்பை புறப்பட்டுச் சென்றார். மேலும் தனது குடும்பத்தையும் கவர்னர் ஊட்டியில் இருந்து மும்பை வரச் செய்துள்ளார். இதனிடையே கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ் பங்கேற்கமாட்டார் என ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
ஆளுநரின் சென்னை வருகை ரத்தானதால் சசிகலா பதிவியேற்கும் நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்பபடுகிறது. மேலும் சசிகலா பதவியேற்கவிருந்த சென்னை பல்கலையில் போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சசிகலா முதல்வராக பதவி ஏற்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதனால் மன்னார்குடி தரப்பு குழப்பத்தில் உள்ளது.