சிக்கன நடவடிக்கையில் மோடி: அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு விமானத்தில் முதல் வகுப்பு பயண சலுகை ‘கட்’
டெல்லி: மோடி அரசின் சிக்கன நடவடிக்கையின் ஒரு கட்டமாக அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வெளிநாட்டுப் பயண சலுகைகள் உள்ளிட்ட பல மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
அரசுப் பயணங்களின் போது விமானங்களில் முதல் வகுப்பில் செல்லும் வசதியை ரத்து செய்துள்ள மத்திய அரசு, முடிந்தவரை காணொலி காட்சிகள் மூலமாக பணிகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
இதேபோல், வரும் 2014 -15ம் நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை ஏற்படாமல் தடுப்பதற்காக அதிகாரிகள் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மீட்டிங்குகளை நடத்தவும் மத்திய நிதி அமைச்சகம் தடை விதித்துள்ளது. கடந்த ஒருவருடமாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பணியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வரையறைகள்...
பட்ஜெட்டைக் கருத்தில் கொண்டு அதிகாரிகளின் தகுதிக்கு தக்கபடி விமானத்தில் முதல் வகுப்பு பயணம் ஏற்பாடு செய்யப்படுவதற்கும் குறிப்பிட்ட வரையறைகள் செய்யப்பட்டுள்ளன.
வீடியோ கான்பரஸ் வசதி...
வீடியோ கான்பரஸ் வசதியை தக்க விதத்தில் பயன்படுத்துவதன் மூலம் பயணங்களை குறைத்து அதிக பலன் அடைய முடியும் எனவும் நிதி அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
தடை நீடிக்கும்...
ராணுவம் மற்றும் துணை ராணுவம் உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினருக்கு வாகனங்கள் வாங்க அனுமதி வழங்கப் படும். அதே வேளையில் மற்ற வாகனங்கள் வாங்குவதற்கு விதிக்கப் பட்டுள்ள தடை நீடிக்கும் எனத் தெரிவிக்கப் பட்டுள்ளது.
பட்ஜெட் பற்றாக்குறை...
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பட்ஜெட் பற்றாக்குறையை வரும் 2016 -17 நிதியாண்டுகளில் 3 சதவீதமாக குறைக்க இயலும் என மத்திய அரசு நம்புகிறது. கடந்த 2012 -13ம் நிதியாண்டில் 4.8 சதவீதமாக இருந்த பட்ஜெட் பற்றாக்குறை. 2013 -14ம் நிதியாண்டில் 4.5 சதவீதமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய சவால்...
‘எனக்கு முன்னால் மிகப்பெரிய சவால் உள்ளது. உள்கட்டமைப்பு மற்றும் உற்பத்தி துறை உள்ளிட்டவற்றில் வளர்ச்சியை மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம் ‘ என பட்ஜெட் கூட்டத்தின் போது மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியது நினைவு கூரத்தக்கது.












Click it and Unblock the Notifications