அகமத் பட்டேல் வெற்றி... திருப்பதிக்கு நன்றி செலுத்த நேரில் செல்லும் குஜராத் காங்கிரசார்
ராஜ்யசபா தேர்தலில் அகமத் படேல் பெற்ற வெற்றிக்கு நன்றி தெரிவிக்க, திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள், செல்கின்றனர்.
டெல்லி: குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள், ராஜ்யசபா தேர்தலில் அகமத் படேல் பெற்ற வெற்றிக்கு நன்றி தெரிவிக்க, திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசிக்க செல்கின்றனர்.
நேற்று டெல்லியில் குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர்கள், எம்.எல்.ஏக்கள் ஆகியோர் ஒட்டுமொத்தமாக டெல்லியில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தி, ஆகியோரை நேரில் சந்தித்தனர். அப்போது அகமத் பட்டேலும் உடனிருந்தார்.
இந்தச் சந்திப்புக்குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த குஜராத் காங்கிரஸ் மாநில தலைவர் பாரத் சிங் சோலங்கி கூறுகையில்,
" அகமத் பட்டேல் வெற்றி குறித்து பேசினோம். மாநிலத்தில் காங்கிரஸ் வளர்ச்சி அதிகரிப்பது பற்றியும் நாங்கள் ஆலோசித்தோம். மேலும், பாஜகவுக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் பிரசாரம் வலுவாக செய்வது எப்படி என்பது குறித்தும் விரிவான ஆலோசனை செய்தோம்." என்று கூறினார்.
வரும் 22ம் தேதி, குஜராத் காங்கிரஸ் கமிட்டி திருப்பதி செல்லவுள்ளது. அகமத் படேல் ராஜ்ய சபாவில் வெற்றி பெறவேண்டும் என்று வேண்டியபடி நடந்துள்ளதால், குஜராத் காங்கிரசார் மொத்தமாக திருப்பதி வெங்கடாஜலபதியை தரிசித்து நன்றி தெரிவிக்க செல்கிறார்கள் என்றும் காங்கிரஸ் மாநில தலைவர் பாரத் சிங் சோலங்கி மேலும் தெரிவித்தார்.