இதான் ஃபர்ஸ்ட் டைம்.. இந்திய தொழில்நுட்பம்! விண்ணில் பாய்ந்தது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி எப் 12 ராக்கெட்
அமராவதி: ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இருந்து இன்று காலை என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவபட்டது ஜிஎஸ்எல்வி எப் 12 ராக்கெட்.
தரைவழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) என்ற கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, IRNSS 1A, 1B, 1C, 1D, 1E, 1F, 1G என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் ரூ.1,420 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு நிலை நிறுத்தப்பட்ட சில செயற்கைக்கோள் செயலிழந்தன. அவற்றுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்பி வருகிறது.
அந்த வகையில், IRNSS 1G செயற்கைக்கோள் செயலிழந்த நிலையில் அதற்கு மாற்றாக NVS - 01 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. ஜிஎஸ்எல்வி எஃப் - 1 ராக்கெட் மூலமாக இந்த செயற்கைக்கோள் இன்று காலை விண்ணில் ஏவப்பட்டது.
ராக்கெட்டை ஏவுவதற்கான இறுதிகட்டப் பணிகள் நிறைவடைந்து இருக்கும் நிலையில் கவுண்டவுன் தொடங்கப்பட்டு உள்ளது. 27.30 மணி நேர கவுன்ட் டவுன் நேற்று தொடங்கிய நிலையில் இன்று காலை 10.42 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து அந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு உள்ளது.

2,232 கிலோ எடை கொண்ட NVS - 01 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள். முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரமும் இந்த செயற்கைக் கோளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது விண்ணில் ஏவப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்படும்.
இன்று ஏவப்பட்ட இந்த செயற்கைக்கோள் மற்ற செயற்கைக்கோள்களுடன் இணைந்து தரை வழி போக்குவரத்து, கடல் வழி போக்குவரத்து, வான்வெளி வழி போக்குவரத்தைக் கண்காணிக்கும் என்று கூறப்பட்டு உள்ளது. குறிப்பாக பேரிடா் சமயங்களில் தெளிவான தகவல்களை இந்த செயற்கைக்கோள் வழங்கும் என்று இஸ்ரோ நம்பிக்கை தெரிவித்து உள்ளது.












Click it and Unblock the Notifications