2வது மனைவிக்கு சீட் கேட்டா மருமகளுக்கா தர்றீங்க.. பாஜக மேலிடத்திடம் பாய்ந்த குஜராத் எம்.பி.
Recommended Video
அகமதாபாத்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாஜக தரப்பில் ஏகப்பட்ட குட்டி கலாட்டாக்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. அங்குள்ள மூத்த எம்.பி. ஒருவர் தனது 2வது மனைவிக்கு சீட் கேட்டார். ஆனால் கட்சி மேலிடமோ அவரது மருமகளுக்கு சீட் கொடுத்து எம்.பிக்கு ஆப்படித்து விட்டது. இதனால் அந்த எம்.பி. கடுப்பாகியுளள்ளார்.
பன்ச்மஹால் தொகுதி லோக்சபா உறுப்பினர் பிரபாத்சின் செளகான். இவர் நீண்டகால எம்.பி. பாஜகவின் மூத்த தலைவரும் கூட. இவருக்கு மொத்தம் 2 மனைவிகள். முதல் மனைவி இறந்து விட்டார். 2வது மனைவி பெயர் ரங்கேஸ்வரி.
சட்டசபைத் தேர்தலில் காலோல் தொகுதியில் ரங்கேஸ்வரிக்கு சீட் வாங்கி விட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார் செளகான். ஆனால் அவரது முதல் மனைவிக்குப் பிறந்த பிரவீன்சின் செளகானின் மனைவியான சுமன் செளகானுக்கு சீட் கொடுத்து விட்டது.
அதிர்ச்சியில் செளகான்
கட்சி மேலிடம் தனது 2வது மனைவிக்கு ஏமாற்றத்தைக் கொடுத்து விட்டு மருமகளுக்கு சீட் கொடுத்ததால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் செளகான். இதுதொடர்பாக கட்சித் தலைவர் அமித் ஷாவுக்கு அவர் காட்டமான கடிதம் எழுதியுள்ளார்.
ஜெயிக்க விட்டாதானே
அதில் எனது எம்.பி தொகுதிக்குட்பட்ட 7 சட்டசபைத் தொகுதிகளிலும் பாஜகவின் வெற்றி நிச்சயம் கேள்விக்குறியா்கி விடும். அங்கு என்னால் வேலை பார்க்க முடியாது. காலோல் தொகுதி பக்கம் கூட போக மாட்டேன். எனது மனைவிக்கு சீட் கொடுக்க வேண்டும். அப்போதுதான் நல்லது என்று கூறியுள்ளார் செளகான்.
டிவி கேமராமேன் மீது தாக்குதல்
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது கோபமடைந்தார் செளகான். டிவி கேமராமேன் மீது பாய்ந்த அவர் கேமராவைத் தட்டி விட்டார். பன்ச்மஹால் தொகுதிக்குட்பட்ட மோரா கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது.
ஜாதிச் சண்டை வேறு
இந்த விவகாரத்தில் இன்னொரு பிரச்சினையும் உள்ளது. அதாவது ரங்கேஸ்வரி ஒரு பழங்குடியின வகுப்பைச் சேர்ந்தவர். சுமன் ராஜ்புத் வம்சத்தைச் சேர்ந்தவர். இதனால் பழங்குடியினர் வாக்குகளை பாஜக இழக்கும் என்றும் சபித்துள்ளார் செளகான்.
எத்தனை பிரச்சினையைத்தான் சமாளிக்குமோ பாஜக!