24,000 கிலோ வெங்காயம்... விற்க முடியாமல் தவித்த விவசாயிகள்... மொத்தமாக வாங்கிய காங்கிரஸ்
காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 24,000 கிலோ வெங்காயத்தை விற்க முடியாமல் விவசாயிகள் தவித்து வந்த சூழலில் அதனை மொத்தமாக கொள்முதல் செய்து மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது காங்கிரஸ்.
கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த 50 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் திணறி வருகின்றனர். இப்போதுஊரடங்கில் ஓரளவு தளர்வு கொண்டு வந்திருந்தாலும் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை கடும் கெடுபிடி காட்டப்பட்டு வந்தது.

இதனால் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதுமே விவசாயிகள் பரிதவிப்புக்கு ஆளாகினர். இந்நிலையில் குஜராத் மாநிலம் சூரத் பகுதி விவசாயிகள் சுமார் 24,000 கிலோ வெங்காயத்தை சாகுபடி செய்து அதற்கு நியாயமான விலை கிடைக்காததால் விற்பனை செய்யாமல் தவித்து வந்தனர். சிலர் வெறுமையில் சாலைகளில் வெங்காயத்தை கொட்டவும் செய்தனர்.
இது குறித்து கவனத்தில் கொண்ட குஜராத் மாநில காங்கிரஸார், வெங்காய விவசாயிகளிடம் இருந்து மொத்தமாக கொள்முதல் செய்து அதனை மக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். குடும்பம் ஒன்றுக்கு தலா 3 கிலோ வீதம் வெங்காயம் கொடுக்கப்படுகிறது. விவசாயிகளுக்கும் உதவியாக, மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட இந்த பணிக்காக குஜராத் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளை அக்கட்சியின் தலைமை பாராட்டியுள்ளது.

காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களிடம் வெங்காயம் கொள்முதல் செய்தது இக்கட்டான இந்த பேரிடர் காலத்தில் பேருதவியாக இருந்தது என சூரத் பகுதி வெங்காய விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications