2002 குஜராத் கலவரம்.. டெல்லி ஆளுநருக்கு எதிரான குற்ற வழக்கு விசாரணைக்கு தடை! குஜராத் ஐகோர்ட் உத்தரவு
காந்திநகர்: டெல்லியின் துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனாவுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை குஜராத் உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டு இருக்கிறது.
கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் டெல்லி துணை நிலை ஆளுநராக பதவியேற்றவர் வினய் குமார் சக்சேனா. கடந்த 2002 ஆம் ஆண்டு சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கரை தாக்கியதாகவும், கலவரத்தில் ஈடுபட்டதாகவும், சட்டவிரோதமாக கூடியதாகவும் கூறி வினய் மற்றும் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வினய் குமார் சக்சேனா, மத்திய அரசின் பல்வேறு பொறுப்புகளை வகித்தது தொடங்கி டெல்லி துணை நிலை ஆளுநரானது வரை இந்த 21 ஆண்டுகால பழைய வழக்கு அவரை தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்த நிலையில் தனக்கு எதிரான இந்த குற்ற வழக்கின் விசாரணையை நிறுத்தக்கோரி இவர் கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி அகமதாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு கடந்த மே 8 ஆம் தேதி மாஜிஸ்திரேட் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு விசாரணையை நிறுத்தி வைக்குமாறு அரசிடம் இருந்து எந்த விதமான கோரிக்கையும் வரவில்லை என்றும், பின்னர் சாட்சியங்களை பராமரிப்பதில் சிரமம் ஏற்படும் எனவும் கூறி சக்சேனாவின் வழக்கை தள்ளுபடி செய்தார் மாஜிஸ்திரேட். இதன் காரணமாக ஆளுநர் வினய் குமார் மீதான 2002 குற்ற வழக்கின் விசாரணை தொடர்ந்து வந்தது.

இந்த நிலையில், அகமதாபாத் மாவட்ட நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தனக்கு எதிரான வழக்கு விசாரணை நிறுத்தக்கோரி குஜராத் உயர்நீதிமன்றத்தில் விஜய் குமார் சக்சேனா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி மோக்சா தக்கெர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது வினய் குமார் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜல் உன்வல்லா அரசியலமைப்பு சட்ட விதிகளை சுட்டிக்காட்டி வாதிட்டார்.
"இந்தியாவின் குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களின் பதவிக்காலத்தில் அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படவோ, குற்றவழக்குகள் பதிவு செய்யப்படவோ கூடாது." என்ற சட்டம் இருப்பதாக சுட்டிக்காட்டி வாதிட்டார். அதேபோல் இந்திய குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்களை அவர்களில் பதவிகாலத்தில் கைது செய்யவோ, சிறையில் அடைக்கவோ எந்த நீதிமன்றத்தாலும் உத்தரவிட முடியாது." என்றும் சட்டம் இருப்பதாக அவர் கூறினார்.
இந்த வாதத்தை கேட்ட குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதி, டெல்லி ஆளுநர் வினய் குமாருக்கு எதிரான வழக்கு விசாரணையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். அதேபோல், புகார்தாரரான சமூக செயற்பாட்டாளர் மேதா பட்கருக்கு நோட்டீஸ் அனுப்ப வேண்டும் எனவும், இந்த நோட்டீஸ் மீது ஜூன் 19 ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என அவருக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த 2002 குஜராத் மதக் கலவரத்தின்போது, சபர்மதி ஆசிரமத்தில் நடைபெற்ற சமூக செயற்பாட்டாளர்கள் கூட்டத்தில் அப்போது பாஜக எம்.எல்.ஏவாக இருந்த அமித்ஷா, அமித் தக்கர், காங்கிரஸ் தலைவர் ரோஹித் படேல் மற்றும் வினய் குமார் சக்சேனா அங்கு சென்று அவரை தாக்கியதாக கூறி வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications