காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி வழக்கு: தீர்ப்பளித்த நீதிபதியை இடமாற்றம் செய்ய பரிந்துரை!
அகமதாபாத்: காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி அவதூறு வழக்கில் அவரது தண்டனையை நிறுத்தி வைக்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதியை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு தொகுதி எம்.பியுமான ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது மோடி பெயர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது மோடி' என்று பெயர் வைத்தவர்கள் எல்லாம் எப்படி திருடர்களாக இருக்கிறார்கள் என்ற ரீதியில் ராகுல் பேசியது பரபரப்புக்கு உள்ளானது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றத்தில் அம்மாநில பாஜக எம்எல்ஏ புர்னேஷ் மோடி குற்றவியல் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கியது. மக்கள் பிரதிநித்துவ சட்டப்படி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றால் எம்.பி, எம்.எல்.ஏக்களின் பதவி தானாக காலியாகி விடும். அதன்படி இதையடுத்து ராகுல் காந்தி எம்பி பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் குஜராத் செஷன்ஸ், குஜராத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றமும் தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து உத்தரவிட்டது.
மேலும், அவதூறு வழக்கில் அதிகபட்ச தண்டனை விதிக்கப்பட்டது குறித்தும் அதற்கான காரணத்தை நீதிபதி தெரிவிக்கவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்து இருந்தது. ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து அவர் மீண்டும் எம்.பி ஆனார். இந்த நிலையில், ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில், தண்டனையை நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்த குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் எம்.பிரச்சக்- ஐ இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.
மொத்தமாக 23 நீதிபதிகளை இடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ள நிலையில், இந்த பட்டியலில், ராகுல் வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதியும் இடம் பெற்றுள்ளார். நீதித்துறையின் நிர்வாக மேம்பாடு காரணமாக இடமாற்றம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டு இருப்பதாக உச்ச நீதிமன்றத்தின் இணையதளத்தில் ஆவணம் பதிவேற்றம் செய்யப்பட்டு இருந்தது.
குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் பிரச்சக், குஜராத் கலவர வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பாஜக முன்னாள் அமைச்சர் மாய கோடனானிக்கு ஆதரவாக வாதாடியுள்ளார். குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றிய நீதிபதி பிரச்சக், நரேந்திர மோடி முதல்வராக இருந்த போது, அரசு உதவி வழக்கறிஞராகவும் பணியாற்றியிருக்கிறார். பிரதராக மோடி பதவியேற்ற மறு ஆண்டு அதாவது 2015 ஆம் ஆண்டு குஜராத் உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் பொறுப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். 2019 ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்த நீதிபதி பிரச்சக், 2021 ஆம் ஆண்டு உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications