விமானப் பணிப் பெண்ணுடன் வலுகட்டாயமாக செல்பி எடுக்க முயற்சி! - மும்பையில் ஒருவர் கைது
மும்பை: ஜெட் ஏர்வேஸ் பணிப்பெண்ணுடன் பலவந்தமாக செல்பி எடுக்க முயற்சித்த குஜராத்தை சேர்ந்த 29-வயது நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தை சேர்ந்த முகமது அம்புத்கர் என்ற 29 வயது நபர், நேற்று ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சவூதி அரேபியாவில் உள்ள டம்மம் நகரில் இருந்து மும்பைக்கு வந்துள்ளார்.
இவர் தனது முழு பயணத்தின் போது விமானப் பணிப்பெண்களுடன் வலுகட்டாயமாக செல்பி எடுப்பதற்கு தொடர்ந்து முயற்சித்துள்ளார். அந்த பணிப்பெண் மறுத்த போதும் அவர் தொடர்ந்து தொந்தரவு கொடுத்துள்ள்ளார். மேலும் முகமது அம்புத்கர் விமானத்தின் கழிவறையில் புகைப்பிடித்தாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், விமானம் மும்பை வந்தடைந்தவுடன் வழக்கமான பரிசோதனை நடந்தது. இதனிடையே பணிப்பெண் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது 354 மற்றும் 336 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மும்பையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட முகமது அம்புத்கரை, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.