மோடி தேர்தல் விதிகளை மீறவில்லை: குஜராத் காவல்துறை விளக்கம்
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தேர்தல் விதிமுறைகளை மீறவில்லை என்று அம்மாநில காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.
குஜராத்தின் காந்திநகர் தொகுதியில் கடந்த புதன்கிழமை வாக்களித்த நரேந்திர மோடி, பாரதிய ஜனதா கட்சியின் சின்னத்தை கையில் ஏந்தியவாறு செய்தியாளர்களிடம் பேசினார்.

இதையடுத்து தேர்தல் ஆணைய உத்தரவுப்படி குஜராத் காவல்துறையினர், மோடி மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குஜராத் காவல்துறை உயர் அதிகாரி ஒருவர். வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டருக்கு வெளியேதான் மோடி சின்னத்தை காட்டிப் பேசியதாக தெரிவித்தார்.
ஆனால் 4 பேருக்கு மேல் ஒன்றாக இருந்தது தொடர்பாக மட்டுமே நரேந்திரமோடி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இந்த விவகாரத்தில் மோடியை கைது செய்ய வேண்டும் என்பது காங்கிரஸ் கட்சியின் கோரிக்கை. இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றையும் காங்கிரஸ் அனுப்பி வைத்துள்ளது.
நாயனாருக்கு மட்டும் அன்று விதிவிலக்கா?- மோடி தரப்பு
மேலும் மோடி தரப்பு கேரளாவின் ஈ.கே. நாயனார் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எப்படி செயல்பட்டது தெரியுமா? அவருக்கு ஒரு நியாயம்? மோடிக்கு வழக்கா? என்கின்றனர்.
அதாவது 1999ஆம் ஆண்டு கேரளா முதல்வராக இருந்த ஈ.கே.நாயனார், கண்ணூர் லோக்சபா தொகுதியில் வாக்களித்தார். அப்போது தாம் வாக்குச் சீட்டில் வாக்களித்த விவரத்தை அப்படியே ஊடகங்களுக்குக் காட்டி போட்டோவும் எடுத்துக் கொண்டார்.
இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகாரும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் நாயனார் விவகாரத்தில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று தெளிவாக தேர்தல் ஆணையம் கூறியது.
வாக்களித்தது யாருக்கு என்று பகிரங்கப்படுத்தியதற்கே நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையம் தடை செய்யப்படாத பகுதியில் தாமரை சின்னத்தை காட்டியதற்கு வழக்கு போடுவதா? என்று கொந்தளிக்கிறது மோடி தரப்பு.












Click it and Unblock the Notifications