தேசத் துரோக வழக்கு: ஹர்திக் படேலை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு- கபில் சிபல் ஆஜரானார்!
டெல்லி: குஜராத் அரசு தொடர்ந்த தேசத் துரோக வழக்கில் இருந்து படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேலை விடுவிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கில் ஹர்திக் படேலுக்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கபில்சிபல் ஆஜராகி இருந்தார்.
குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி ஹர்திக் படேல் தலைமையில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக வெடித்தது. மேலும் போலீசாரை படுகொலை செய்ய வேண்டும் என்றும் ஹர்திக் பேசியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக குஜராத் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தம் மீதான தேச துரோக குற்றச்சாட்டை திரும்பப் பெற வேண்டுமென்று கோரி ஹார்திக் படேல் சார்பில் குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதை குஜராத் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஹர்திக் படேல் மீதான தேசத் துரோக குற்றச்சாட்டு தொடர்பான விசாரணை ஒன்றரை மாதத்தில் முடித்து, அது தொடர்பான அறிக்கையை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் வைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த இடைப்பட்ட காலத்தில் உச்ச நீதிமன்றத்தின் அனுமதியின்றி, தேசத் துரோக வழக்கின் பேரில் ஹார்திக் படேல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யக் கூடாது. ஆட்கொணர்வு மனு வழக்கு உள்பட அவர் மீதான பிற வழக்குகளை குஜராத் உயர் நீதிமன்றமே விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்கில் அடுத்த கட்ட விசாரணை வரும் ஜனவரி 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஹர்திக் படேலுக்காக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் ஆஜராகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications