இந்திய குடியுரிமையை துறக்கும் குஜராத் மக்கள்.. ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரிப்பு! ஷாக் ரிப்போர்ட்
அகமதாபாத்: படிப்பு, வேலை உள்ளிட்ட விஷயங்களுக்காக பொதுவாக வெளிநாடுகளுக்குச் செல்வோரில் சிலர் அப்படியே அங்கேயே செட்டில் ஆகிவிடுவார்கள். அவர்கள் இந்தியக் குடியுரிமையையும் துறந்துவிடுவார்கள். அப்படி குஜராத்தில் இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.. இதற்கு இரு முக்கிய காரணங்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் விளக்குகின்றனர்.
நமது நாட்டில் இருந்து படிப்பு, வேலை உள்ளிட்ட விஷயங்களுக்காக வெளிநாடுகளுக்குச் செல்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அவர்கள் பொதுவாக சில ஆண்டுகளில் தாயகம் திரும்பிவிடுவார்கள்.

இரண்டு மடங்கு அதிகரிப்பு: இருப்பினும், சிலர் அப்படியே அங்கேயே செட்டில் ஆகிவிடுவார்கள். அப்படி வெளிநாடுகளில் செட்டில் ஆகும் இந்தியர்கள் தங்கள் பாஸ்போர்ட்களை ஒப்படைக்க வேண்டும். அப்படி பாஸ்போர்ட்டை சரணடையும் இந்தியர்களின் எண்ணிக்கை குஜராத்தில் ஒரே ஆண்டில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளதாகப் பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வளவு பேர்: அங்குக் கடந்த 2022இல் 241 பேர் பாஸ்போர்ட்டை துறந்து இருந்தனர். இது கடந்தாண்டு இரு மடங்கு அதிகரித்து 485ஆக உயர்ந்தது. இந்தாண்டு மே மாதம் வரை ஏற்கனவே 244 பேர் தங்கள் பாஸ்போர்ட்டை ஒப்படைத்துவிட்டு குடியுரிமை துறந்துள்ளனர். பாஸ்போர்ட்டுகளை சரணடைந்தோரில் 30-45 வயதான நபர்களே அதிகம் என்றும் அதில் கூறப்பட்டு இருந்தது.மேலும், பாஸ்போர்ட்டை ஒப்படைத்தவர்களில் பெரும்பாலானவர்கள் அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா மற்றும் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்றத்தில் கடந்த 2014 முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு, இந்தியக் குடியுரிமையைத் துறந்தவர்கள் குறித்த தகவல்களை மத்திய அரசு பகிர்ந்து இருந்தது. அதில் கடந்த 2014 முதல் 2022 வரையிலான 8 ஆண்டுகளில் டெல்லியில் அதிகபட்சமாக 60,414 பேர் குடியுரிமையைத் துறந்துள்ளதாகக் கூறப்பட்டு இருந்தது. அடுத்து பஞ்சாபில் இருந்து 28,117 பேரும், குஜராத்தில் இருந்து 22,300 பேரும் இந்த 8 ஆண்டுகளில் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர்.
உயர்வு: குஜராத்தில் 2022இல் குடியுரிமை 241 பேர் தங்கள் குடியுரிமையைத் திறந்த நிலையில், அது கடந்தாண்டு இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. கொரோனா காலகட்டத்திற்கு பிறகே குடியுரிமையைத் துறப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளிநாடுகளுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்கள், அங்கேயே செட்டிலாகிவிடுவதாலேயே இது அதிகரிப்பதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்ன காரணம்: இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "குஜராத்தில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான இளைஞர்கள் உயர்கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்கிறார்கள். அவர்கள் அப்படியே அங்கு செட்டிலாகிவிடுகிறார்கள். இதுவே பாஸ்போர்ட்களை சரண்டர் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணமாகும்" என்றார்.
அதேபோல பிஸ்னஸ்மேன்கள் வெளிநாடுகளில் செட்டிலாவதும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் வாழ்க்கைத் தரத்திற்காகப் பல தொழிலதிபர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதாகக் கூறுகின்றனர்.. இங்குப் பணக்காரராக உள்ளவர்களும் பசுமையான இடங்கள், காற்று மாசு குறைவு உள்ளிட்ட காரணங்களால் வெளிநாடுகளுக்குச் செல்ல ஆர்வம் காட்டுகின்றனர்.
ரூல்ஸ் என்ன: பொதுவாக அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகள் இரட்டை குடியுரிமையை அங்கீகரிக்கிறது. அதாவது ஒருவர் ஒரே நேரத்தில் அமெரிக்கா மற்றும் கனடா குடியுரிமை பெற்று இருக்கலாம். ஆனால், இந்தியச் சட்டம் இரட்டை குடியுரிமையை அனுமதிக்கவில்லை. எனவே, பாஸ்போர்ட் சட்டம் 1967இன் படி, இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுவிட்டால், மூன்று ஆண்டுகளுக்குள் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு ஒப்படைத்தால் ரூ.10,000 முதல் ரூ.50,000 வரை அபராதம் விதிக்கப்படும்.












Click it and Unblock the Notifications