குஜராத்தில் இளம்பெண்ணை வேவு பார்த்த விவகாரம்- 16–ந்தேதிக்கு முன் நீதிபதி நியமனம்!
டெல்லி: குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவுபார்க்க நரேந்திர மோடி உத்தரவிட்டதாக கூறப்படும் விவகாரத்தை விசாரிப்பதற்காக வரும் 16-ந் தேதிக்கு முன் நீதிபதி நியமிக்கப்படுவார் என மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார்.

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி, குஜராத்தில் இளம்பெண் ஒருவரை வேவு பார்க்குமாறு கூறியதன் பேரில், அவரது வலது கரமான அமித் ஷா காவல்துறைக்கு உத்தரவிட்டார் என கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.
இந்த விவகாரத்தில் அமித் ஷா மற்றும் காவல்துறை அதிகாரிகள் இடையே நடைபெற்ற உரையாடல் அடங்கிய டேப் ஆதாரங்களையும் ஊடகங்கள் வெளியிட்டன. மேலும் இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு பெண்கள் அமைப்பினர் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இந்த விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான குழு அமைத்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. எனினும் இந்த குழுவுக்கான நீதிபதி இதுவரை நியமிக்கப்படவில்லை.
இந்தநிலையில் இன்று சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே, குஜராத்தில் இளம்பெண் வேவு பார்க்கப்பட்டதாக எழுந்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்த, குழு ஒன்றை அமைக்க மத்திய அமைச்சரவை முடிவு செய்தது. இந்த குழுவுக்கான நீதிபதி 16-ந் தேதிக்கு முன் நியமிக்கப்படுவார் என்றார்.
அருண் ஜேட்லி எதிர்ப்பு
ஆனால் மத்திய அரசின் இந்த முடிவு, அரசியல் உள்நோக்கம் கொண்டது என்கிறது பாரதிய ஜனதா. இது குறித்து அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அருண் ஜெட்லி, ‘மோடிக்கு எதிராக காங்கிரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை இது' என்றார். மேலும், மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எந்த நீதிபதியும் ஒத்துழைக்கமாட்டார்' என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications