லீவ் கேட்ட கால் சென்டர் ஊழியரை வாளால் குத்திவிட்டு, அவரின் 2 நண்பர்களையும் குத்திக் கொன்ற டீம் லீடர்
குர்காவ்ன்: குர்காவ்னில் மகனின் பிறந்தநாளுக்காக விடுப்பு கேட்ட கால் சென்டர் ஊழியரை அவரது டீம் லீடர் வாளால் குத்தியதோடு மட்டுமல்லாமல் அவரது நண்பர்கள் 2 பேரையும் குத்திக் கொலை செய்துள்ளார்.
ஹரியானா மாநிலம் குர்காவ்ன் உத்யோக் விஹாரில் உள்ளது செர்கோ குளோபல் சர்வீசஸ் என்ற கால் சென்டர். அங்கு வேலை பார்ப்பவர் சுனில் குமார்(25). அவருடைய மகனுக்கு இன்று பிறந்தநாள் என்று டீம் லீடர் முகேஷ் பிஷ்ட்டிடம் நேற்று விடுப்பு கேட்டுள்ளார். அதற்கு முகேஷ் விடுப்பு தர மறுத்துவிட்டார்.
இதையடுத்து அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அலுவலகத்திற்கு வெளிய வந்த சுனிலை முகேஷ் வாளால் குத்தினார். இதை தடுக்க வந்த சுனிலின் நண்பர்கள் ராம் அவதார் மற்றும் தேவேந்தர் ஆகியோருக்கும் குத்து விழுந்தது. இதையடுத்து அந்த 3 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் ராம் அவதார் மற்றும் தேவேந்தர் சிகிச்சை பலனின்றி பலியாகினர். சுனில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.