உருது + அரபுவில் Code Words.. வங்கதேச எல்லையில் இரவில் நடக்கும் உரையாடல்.. இந்தியாவுக்கு ஸ்கெட்ச்சா?
கொல்கத்தா: இந்தியா - வங்கதேசம் எல்லையில் மேற்கு வங்க மாநிலத்தில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை சங்கேத வார்த்தைகளுடன் (Code Words) உருது, அரபு, பெங்காலி மொழிகளில் தகவல் பரிமாற்றம் செய்யப்படும் சம்பவம் நடந்து வருகிறது. இதனை ஹாம் ரேடியோ பயன்படுத்துபவர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஏற்கனவே இந்தியா - வங்கதேசம் இடையே பிரச்சனை உள்ள நிலையில் இந்த சம்பவம் எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஹாம் ரேடியோ என்றால் என்ன? அதன் வழியாக நடந்த சங்கதே வார்த்தையுடன் கூடிய தகவல் பரிமாற்றத்தால் இந்தியாவுக்கு எப்படி ஆபத்து வரலாம்? என்பது பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு நடந்த மாணவர் போராட்டங்கள் வன்முறையாக மாறின. இதையடுத்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நம் நாட்டில் தஞ்சமடைந்தார். வங்கதேசத்தில் தற்போது முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு நடந்து வருகிறது. இந்த அரசு நம் நாட்டுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறது.
வங்கதேசத்தில் வசிக்கும் சிறுபான்மையினர் மீதான தாக்குதல், பாகிஸ்தான், சீனாவுடன் கைகோர்ப்பு உள்ளிட்டவற்றின் மூலம் நம் நாட்டை சீண்டி வருகிறது. அதுமட்டுமின்றி எல்லையில் உளவு பார்க்கும் ட்ரோனை பயன்படுத்தி மிரட்டுவதோடு, எல்லையில் பாதுகாப்பு வேலி அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனால் நம் நாட்டுக்கும், வங்கதேசத்துக்கும் இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சீனா, பாகிஸ்தான் போல் வங்கதேசமும் படிப்படியாக நம் நாட்டை குறிவைத்து சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.
இப்படியான சூழலில் தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா - வங்கதேச எல்லையில் ஹாம் ரேடியோ மூலம் பெங்காலி, உருது மற்றும் அரபு மொழிகளில் தகவல் பரிமாற்றம் என்பது நடந்து வருகிறது. இந்த தகவல் பரிமாற்றம் என்பது Code Word மூலமாக நடந்து வருகிறது. இதுதான் தற்போது நம் நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
அதாவது ‛ஹாம் ரேடியோ’ என்பது ஒரு பொழுதுபோக்குடன் கூடிய தகவல் பரிமாற்ற முறை. தொலைபேசி, செல்போன் பயன்படுத்த முடியாத இடங்களில் ‛ஹாம் ரேடியோ’வை பயன்படுத்த முடியும். ‛ஹாம் ரேடியோ’ வழியாக ஒருவர் இன்னொருவருக்கு சொல்ல வேண்டிய விஷயங்களை எளிதில் பரிமாற்றம் செய்யலாம். பொதுவாக ராணுவம் மற்றும் நாடுகளுக்கு இடையேயான எல்லைப்பகுதியில் வசிக்கும் மக்கள் ‛ஹாம் ரேடியோ’ பயன்படுத்துகின்றனர்.
கதறும் வங்கதேசம்.. அமெரிக்காவை தொடர்ந்து சுவிட்சர்லாந்து கொடுத்த ஷாக்.. முகமது யூனுசுக்கு செம அடி
பொதுமக்கள் பயன்படுத்தும்போது அதற்கு என்று லைசென்ஸ் வாங்க வேண்டும். இந்த ‛ஹாம் ரேடியோ’ மூலம் தகவல் என்பது ரேடியோ அலைவரிசை வாயிலாக பரிமாற்றம் செய்யப்படும். இந்தியா - வங்கதேச எல்லையில் மேற்கு வங்க மாநிலத்தில் வசிக்கும் மக்கள் நிறையபேர் இந்த 'ஹாம் ரேடியோ'வை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் தான் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில், சந்தேகப்படும்படி சங்கேத குறியீடுகளுடன், பெங்காலி, உருது, அராபிக் மொழிகளில் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படுவதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது ‛ஹாம் ரேடியா’ என்பது குறிப்பிட்ட அலைவரிசை அடிப்படையில் இயங்கும். இதனால் குறிப்பிட்ட எல்லையில் ஒரே நேரத்தில் ‛ஹாம் ரேடியோ’ பயன்படுத்தும்போது இன்னொருவர் பேசுவதை மற்றவரால் கேட்க முடியும்.
அப்படித்தான் எல்லையில் வசிக்கும் மக்கள் இந்த சங்கேத வார்த்தை பற்றிய உரையாடலை கேட்டுள்ளனர். இதனால் சந்தேகமடைந்தவர்கள் யார் நீங்கள்? என்று கேள்வி எழுப்பியபோது மர்மநபர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்து விடுகின்றனர். இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதோடு எல்லையில் பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் இந்தியாவுக்கு எதிரான சதிவேலைகளில் ஈடுபடுகின்றனரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது.
இதுபற்றி மேற்கு வங்க ரேடியோ கிளப் செயலாளர் அம்பரீஷ் நாக் பிஸ்வாஸ் கூறுகையில், ‛‛சந்தேகப்படும் படியான இந்த ரேடியோ சிக்னல்கள் நள்ளிரவு 1 மணி முதல் காலை 3 மணி வரை கிடைத்துள்ளது. இந்த தகவல் பரிமாற்றம் என்பது சங்கேத வார்த்தைகளில் உள்ளது. பெங்காலி மொழியை வங்கதேசத்தினர் உச்சரிப்பு போல் இருக்கிறது. அதேபோல் உருது, அரபிக் மொழியிலும் உள்ளது. இதுதவிர இன்னொரு மொழியிலும் உள்ளது. அந்த மொழி என்னவென்று அடையாளம் காண முடியவில்லை. இதுபற்றி அறிந்து பதில் கேள்வி கேட்கும்போது எதிர்தரப்பினர் மவுனமாகி விடுகின்றனர்’’ என்றார்.
ஹாம் ரேடியோ வழியாக இப்படி சங்கேத வார்த்தைகளுடன் தகவல் பரிமாற்றம் நடப்பது இது முதல் முறையல்ல. இதற்கும் முன்பும் நடந்துள்ளது. சமீபத்தில் அதாவது கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதுபோன்ற சம்பவம் நடந்தது. முதலில் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தின் சோதிபூர் பகுதியில் கிடைத்தது. அதன்பிறகு நார்த் 24 பர்கானஸ் மாவட்டத்தில் உள்ள பசிர்ஹாட் மற்றும் போங்கான் வரையிலான பகுதியில் ஹாம் ரேடியோ மூலமாக சங்கேத வார்த்தைகளில் தகவல் பரிமாற்றம் என்பது நடந்தது.
இதையடுத்து மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தி வரும் சூழலில் தற்போது மீண்டும் இந்த ‛ஹாம் ரேடியோ’ மூலமாக சங்கேத வார்த்தைகள் என்பது பயன்படுத்பதப்பட்டு வருகிறது. பொதுவாக பயங்கரவாத செயல்களை அரங்கேற்றும் நபர்கள் உரையாடல் மற்றும் அதுசார்ந்த மெசேஜ்களை Code Word மூலமாக தான் பகிர்ந்து கொள்வார்கள். இதனால் தான் இந்த சம்பவம் இந்தியாவுக்கு பெரிய அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications