ஓடும் ரயிலில் தொந்தரவு.... மத்திய ரயில்வே அமைச்சரிடம் ட்விட்டரில் உதவி கோரிய பெண்!!
மும்பை: மகாராஷ்டிராவில் ரயிலில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்த பெண் ஒருவரிடம் ஆண் பயணி ஒருவர் தொந்தரவு செய்வதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபுவுக்கு டுவிட்டரில் தகவல் அனுப்பியதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த நம்ரதா மகாஜன் என்ற பெண் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தனியாக பயணம் செய்து கொண்டிருந்தார். அன்று மாலை 7 மணியளவில் ஷெகான் ரயில் நிலையத்தில் ஏறிய ஆண் பயணி ஒருவருவருக்கும், நம்ரதாவுக்கும் இடையே இருக்கை மாற்றி அமர்வது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரவுக்கு ட்விட்டர் மூலம் நம்ரதா தகவல் அனுப்பினார்.

அதில், ‘ரயில் எண் 18030ல் நான் பயணம் செய்து கொண்டிருக்கிறேன். ஒரு ஆண் பயணி என்னை துன்புறுத்துகிறார். எனக்கு பயமாக இருக்கிறது' என்று கூறியிருந்தார். இத்தகவல் ரயில்வே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது.
ரயிலின் பெயர், பெர்த் விவரங்கள் பற்றி பதிலளிக்கும்படியும், இதுபற்றி ஹெல்ப்லைன் நம்பர் 182க்கு தகவல் கொடுக்கும்படியும் அந்தப் பெண்ணுக்கு தவகல் தெரிவிக்கப்பட்டது. புசாவல் ரயில் நிலையத்தை ரயில் சென்றடைந்ததும் அங்கிருந்த ரயில்வே பாதுகாப்புப் போலீசார் ரயிலில் ரயிலில் ஏறினர்.
நம்ரதாவை கண்டுபிடித்த அவர்கள் இருவரிடமும் விசாரணை மேற்கொண்டனர். இது குறித்து ரயில்வே போலீஸ் ஒருவர் கூறுகையில், "நம்ரதா பயணம் செய்த பெட்டியில் ஒரு ஆண் பயணி ஏறியிருக்கிறார். ஆனால் அவருடைய டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் இருந்துள்ளது. எனவே இருக்கை சம்பந்தமாக அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்த நபரின் நடவடிக்கைகள் மற்றும் செய்கைகள் நாகரீகமானதாக இல்லை. நம்ரதா தனியாக பயணம் செய்ததால் பயந்துவிட்டார். அதனால்தான் ரயில்வே அமைச்சருக்கு டுவிட்டர் செய்தி அனுப்பியிருக்கிறார் என்றார்.
இந்நிலையில், அந்த ஆண் பயணி செல்லுபடியாகும் டிக்கெட் வைத்திருந்ததால் ரயில்வே பாதுகாப்பு படையினர் அவரை மற்றொரு பெட்டிக்கு மாற்றி உட்கார வைத்தனர். பின்னர் ரயில்வே அமைச்சருக்கு நம்ரதா டுவிட்டரில் தனது நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் அவசர காலத்தில் தேசிய பாதுகாப்பு ஹெல்ப்லைன் 182-ஐ தொடர்பு கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications