இடஒதுக்கீட்டை ஒழித்துக் கட்டு அல்லது அனைவருக்கும் இடஒதுக்கீடு கொடு.... சொல்வது ஹர்திக் படேல்
அகமதாபாத்: இடஒதுக்கீடு என்பதையே ஒழித்துக் கட்டுங்கள்; அல்லது அனைத்து சமூகத்துக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று படேல் சமூகத் தலைவர் ஹர்திக் படேல் வலியுறுத்தியுள்ளார்.
குஜராத்தில் படேல் சமூகத்தை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் எனக் கோரி நடைபெறும் போராட்டங்களுக்கு தலைமை வகிப்பவர் 22 வயது ஹர்திக் படேல்.
இவரது தலைமையிலான போராட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமது நிலைப்பாடுகள் தொடர்பாக தி இந்து நாளிதழுக்கு ஹர்திக் அளித்த பேட்டியின் சுருக்கம்:
இடஒதுக்கீடுதான் காரணம்
எங்களது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் 80 அல்லது 90 மதிப்பெண்கள் பெற்றாலும் வேலைவாய்ப்பு பெற முடிவதில்லை. அவர்கள் தொழில்துறைக்குத்தான் தள்ளப்படுகிறார்கள். இதற்கு காரணமே இந்த இடஒதுக்கீடு முறைதான்.
தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவர் இடஒதுக்கீட்டு அடிப்படையிலும் பலனடைகிறார்கள்; பொதுப் போட்டி பிரிவிலும் பயனடைகிறார்கள். நான் இந்த நாட்டின் அரசியல் கட்டமைப்பையே மாற்ற விரும்புகிறேன்.
கொடுங்க... கைவிடுங்க
அதாவது நாட்டு மக்களை இடஒதுக்கீட்டில் இருந்து விடுதலை பெறச் செய்யுங்கள்.. அல்லது நாட்டின் குடிமக்கள் ஒவ்வொருவரையுமே இடஒதுக்கீட்டுக்கு அடிமையாக்கிவிடுங்கள்.
ரிமோட் கண்ட்ரோல் அரசியல்
நான் அரசியல் செய்ய வரவில்லை. சிவசேனாவின் தலைவர் பால்தாக்கரேவைப் போல ரிமோட் கண்ட்ரோலாக இருக்க விரும்புகிறேன்.
இதுவும் செய்ய முடியும்
என்னை 70 லட்சம் படேல் சமூகத்தினர் ஆதரிக்கிறார்கள். வங்கிகளில் இருந்து பணத்தை திரும்பப் பெற்றுக் கொண்டு, காய்கறிகளையும் பால் விநியோகத்தையும் எங்களால் நிறுத்த முடியும். இதேபோல் நிறையவே செய்ய முடியும்.
குஜராத்தின் உண்மைமுகம்
வெளிஉலகத்துக்கு முன்வைக்கப்படுகிற குஜராத்துக்கும் யதார்த்தத்துக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கிறது. உத்தரப்பிரதேசம், பீகாரைப் போலத்தான் குஜராத்தும் இருக்கிறது. ஆயிரக்கணக்கான விவசாயிகள் குஜராத்திலும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குஜராத்தின் கிராமப்புறங்களுக்கு சென்று பார்த்தால்தான் உண்மை தெரியவரும்.
இன்னொரு ஜாலியன் வாலாபாக்
அமைதியாக போராடிய எங்கள் மீதான போலீஸ் அடக்குமுறை என்பது இன்னொரு ஜாலியன்வாலாபாக் படுகொலை போலத்தான்.. எங்களை அவமதித்தார்கள்.. பெண்களை தாக்கினார்கள்.. அவர்கள்தான் வன்முறைக்கு காரணம்.
டம்மி முதல்வர்
குஜராத் முதல்வர் ஆனந்திபென் அந்த நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்..அவ்வளவுதான்...அவருக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை.. குஜராத் முதல்வர் என்கிற அதிகாரம் வேறுநபர்களிடம் இருக்கிறது.. ஆகையால் குஜராத் முதல்வர் ஆன்ந்திபென்னிடம் பேச்சு நடத்தப் போவதில்லை.
சர்தார் ஹர்திக்
இந்த போராட்டத்துக்குப் பின்னர் ஹர்திக் கேஜ்ரிவால், ஹர்திக் மோடி என்றால் அழைக்கிறார்கள்.. அவர்கள் என்னை சர்தார் ஹர்திக் என அழைத்தாலும் மிக மகிழ்ச்சிதான். நான் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரோ அல்லது வேறு சமூகங்களுக்கோ எதிரானவன் அல்ல. படேல் சமூகத்தினர் மீது அக்கறை செலுத்துகிறவர்கள் மட்டுமே குஜராத்தை ஆள வேண்டும் என்பதுதான் எங்கள் கொள்கை.
வெளிநாடு உதவி?
நாங்கள் வெளிநாடு வாழ் படேல் சமூகத்திடம் இருந்து நிதி உதவி பெறவில்லை. எங்களது அமைப்பின் உறுப்பினர்களிடம் இருந்து மட்டுமே நிதி உதவி பெறுகிறோம்.
இவ்வாறு ஹர்திக் படேல் கூறியுள்ளார்.