ஹரியானா: 86 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்த காங்கிரஸ்! சஸ்பென்ஸ் லிஸ்ட்டில் 4 இடங்கள்!
சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தலுக்கான 3-வது, 4-வது வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டது. காங்கிரஸ் கட்சி இதுவரை மொத்தம் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. 4 தொகுதிகளுக்கு மட்டும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில் முதல்வர் பதவிக்கு முட்டி மோதும் ரன்தீப்சுர்ஜேவாலா மகனுக்கும் இடம் கொடுக்கப்பட்டுள்ளது.
ஹரியானா சட்டசபை தேர்தல் அக்டோபர் 5-ந் தேதி நடைபெறுகிறது. 90 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இத்தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஹரியானாவில் ஆளும் பாஜகவுக்கு இயல்பான அதிருப்தி அலை இருக்கிறது. அதேநேரத்தில் பாஜகவில் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள், கட்சித் தாவுகிற நிகழ்வுகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகமாக இருக்கிறது.
10 ஆண்டுகால பாஜக ஆட்சி மீதான அதிருப்தி அலை தங்களுக்கு மிக எளிதான வெற்றியைத்தான் தரும் என்பது காங்கிரஸின் எதிர்பார்ப்பு. ஆனால் காங்கிரஸ் கனவில் மண் அள்ளிப் போடும் வகையில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை அறுவடை செய்ய ஆம் ஆத்மி கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது.
ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ஆம் ஆத்மி கட்சியுடனான கூட்டணிக்கு முயற்சிகளை மேற்கொண்டார். ஆம் ஆத்மி கட்சியும் கூட்டணியில் இணைய விருப்பமாக இருந்தது. ஆனால் ஹரியானா முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடாதான் இந்த கூட்டணி முயற்சிக்கு வேட்டு வைத்துவிட்டார்.
காங்கிரஸ் கட்சி நேற்று 3-வது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. மொத்தம் 40 பேர் கொண்ட இந்த 3-வது வேட்பாளர் பட்டியலில் ஹரியானா காங்கிரஸ் முகமும் முதல்வர் பதவி கனவில் இருப்பவருமான ரன்தீப்சுர்ஜேவாலவின் மகன் ஆதித்ய சுர்ஜேவாலாவும் இடம் பெற்றுள்ளார். கைதால் சட்டசபை தொகுதியில் ஆதித்ய சுர்ஜேவாலா போட்டியிடுகிறார். இதனையடுத்து 5 பேர் கொண்ட 4-வது வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டுள்ளது காங்கிரஸ்.
இதுவரை காங்கிரஸ் கட்சி மொத்தம் 86 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. எஞ்சிய 4 இடங்களின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்றுதான் வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் தொடர்ந்து பரபரப்பு நிலவுகிறது.












Click it and Unblock the Notifications