ஜனவரி 22ஆம் தேதியை தீபாவளியாக கொண்டாடுவோம்.. தயாராகும் பாஜக! மோடி சொல்ல வழிமொழிந்த ஹரியானா முதல்வர்!
அயோத்தி: ஜனவரி 22ஆம் தேதியன்று தீபாவளி கொண்டாடுமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டாரும், ஜனவரி 22ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும் எனக் கூறியுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் வரும் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி, அயோத்தியில் சர்வதேச விமான நிலையம், ரயில் நிலையம் எனரூ.15,700 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அயோத்தியில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, “ஜனவரி 22 நடைபெறும் ராமர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக உலகம்முழுவதும் வாழும் இந்துக்களுடன், நானும் பேராவலோடு காத்திருக்கிறேன். அன்றைய விழாவில் அனைவரும் பங்கேற்பது சாத்தியமில்லை.
எனவே, அன்று அயோத்திக்கு வர முயற்சி செய்வதற்குப் பதிலாக, கும்பாபிஷேகத்தின்போது 140 கோடி இந்தியர்களும் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். அந்த நாளை தீபாவளியைப் போல மிகப்பெரிய பண்டிகையாக கொண்டாட வேண்டும். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு அயோத்திக்கு வந்து ராமரை கண்குளிர வழிபடலாம்.” என்றார்.
இந்நிலையில், இன்று ஹரியானா மாநிலம் விருந்தாவனத்தில் உள்ள வாத்சல்யா கிராமத்தில் அயோத்தி இயக்கத்தில் சாத்வியின் பங்கு குறித்த புத்தகத்தை ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் வெளியிட்டார். ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், உ.பி.யின் துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா மற்றும் மத்திய அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி உள்ளிட்ட பல விஐபிக்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.
அப்போது பேசிய ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், “ஜனவரி 22ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்படும். பிரதமர் மோடி முன்னிலையில் ராமர், ஜென்மபூமியில் ராமர் பிரதிஷ்டை செய்யப்படுவார்” எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications