ஹரியானாவில் 2வது இன்னிங்க்ஸை தொடங்கிய லால் கட்டார்.. துணை முதல்வரானார் துஷ்யந்த் சவுத்தாலா!
டெல்லி: ஹரியானா முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த மனோகர் லால் கட்டார் இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார். ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலா ஹரியானாவில் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் கடந்த வாரம் இரண்டு மாநில தேர்தல் முடிவுகள் வெளியானது. இதில் மஹாராஷ்டிரா தேர்தலில் சிவசேனா - பாஜக கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. ஆனால் அங்கு இன்னும் முதல்வரை தேர்வு செய்வதில் குழப்பம் நீடித்து வருகிறது.

இந்த நிலையில் ஹரியானாவில் பாஜக வெற்றிகரமாக கூட்டணி அமைத்து ஆட்சியை பிடித்துள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தலில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது, காங்கிரஸ் 31 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆச்சர்யமாக ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வென்றது.
அதேபோல் சுயேட்சைகள் 7 இடங்களில் வென்றனர். ஹரியானாவில் ஆட்சி அமைக்க 46 இடங்களில் வெல்ல வேண்டும். இதையடுத்து தொங்குசட்டசபை உருவானது. ஜனநாயக் ஜனதா கட்சி மற்றும் சுயேட்சைகள் ஆகியோர் தற்போது ஹரியானாவில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மாறினார்கள்.
இந்த நிலையில் ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலா, பாஜகவிற்கு ஆதரவு அளிப்பதாக அறிவித்தார். இவர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக செய்திகள் பரவி வந்த நிலையில், பாஜகவிற்கு ஆதரவு அளித்தார். தன்னுடைய கட்சியின் 10 எம்எல்ஏக்கள் பாஜகவிற்கு ஆதரவு அளிப்பார்கள் என்று கூறினார்.

இதனால் பாஜக கட்சி மீண்டும் ஹரியானாவில் ஆட்சி அமைத்து உள்ளது. நேற்று பாஜக கட்சியின் மனோகர் லால் கட்டார் ஆளுநர் சத்யதேவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இன்று மதியம் 2.30 மணிக்கு ஹரியானா முதல்வராக பாஜக கட்சியை சேர்ந்த மனோகர் லால் கட்டார் இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
ஜனநாயக் ஜனதா கட்சியின் தலைவர் துஷ்யந்த் சவுத்தாலா ஹரியானாவில் துணை முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். பாஜகவின் மூத்த உறுப்பினர்கள், ஜேஜேபி கட்சி உறுப்பினர்கள், துஷ்யந்தின் அப்பா அஜய் சவுத்தாலா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் 2 ஜேஜேபி உறுப்பினர்கள், 2 சுயேச்சை எம்எல்ஏக்கள் ஆகியோருக்கு பாஜக பெரும்பாலும் அமைச்சர் பதவி வழங்கும் என்று கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications