ஊழல் வழக்கு: ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு 10 ஆண்டு சிறை: உறுதி செய்தது டெல்லி ஹைகோர்ட்!
டெல்லி: ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த 10 ஆண்டு சிறைத் தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
ஹரியானா மாநிலத்தில் இந்திய தேசிய லோக் தளம் கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்த போது கடந்த 2000-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 206 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.
போலி ஆவணங்கள் தயாரித்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களும் நியமனம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
இது குறித்து சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் ஆசிரியர் தேர்வில் ஊழல்கள் நடந்தது உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக சவுதாலா, அவர் மகன் அஜய் சவுதாலா உள்பட 53 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பிறகு அனைவர் மீதும் கடந்த 2008-ம் ஆண்டு சி.பி.ஐ. குற்றப்ப த்திரிக்கையை தாக்கல் செய்தது. இவ்வழக்கில் சவுதாலா உட்பட 53 பேரும் குற்றவாளிகள் என்று டெல்லி சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன் 10 ஆண்டு சிறைத் தண்டனையும் விதித்தது.
இதனைத் தொடர்ந்து சவுதாலா, மகன் அஜய் சவுதாலா உள்ளிட்டோர் டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சிறைத் தண்டனையை எதிர்த்து சவுதாலா உள்ளிட்டோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவைத் தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், இன்று சவுதாலா உள்ளிட்டோரின் மேல்முறையீட்டு மனுவை நிராகரித்து அவர்களுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத் தண்டனையையும் உறுதி செய்தது.