எனக்கு 7 "கேர்ள் பிரண்ட்ஸ்".. அவங்களை சந்தோஷப்படுத்த திருடினேன்.. இவன் ஒரு "காதல்" திருடன்!
நாக்பூர்: மகாராஷ்டிராவில் இளைஞர் ஒருவர் தன்னுடைய 7 காதலிகளைக் குஷிப்படுத்துவதற்காக திருட்டில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. அவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
26 வயதான அந்த இளைஞரை திருட்டு மற்றும் வழிப்பறிக் குற்றங்களுக்காக புல்தானா மாவட்ட போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தனது 7 கேர்ள் பிரண்ட்களை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காக பணம் தேவைப்பட்டதாகவும், அதற்காக இந்தக் குற்றங்களை செய்ததாக அவர் தெரிவித்தார்.
அந்த நபரின் பெயர் ஓம்பிரகாஷ் ரங்நாத் கந்தேவ். இவர் இதுவரை 9 திருட்டுக்களில் ஈடுபட்டுள்ளார். குடிப் பழக்கம் உண்டு. இதுவும், ஆடம்பரமாக வாழ வேண்டும்., கை நிறைய பணம் இருக்க வேண்டும், காதலிகளைச் சமாளிக்க வேண்டும் என்ற கமிட்மெண்டுகள் காரணமாக திருட்டுகளை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவரிடமிருந்து 17 செல்போன்களும், 4.5 லட்சம் பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்டீஸ்கரிலும் அவர் பெயரில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனவாம்.
அவருடைய 7 காதலிகளில் ஒருவர் 12 ஆம் வகுப்பு மாணவியாம். பேஸ்புக் மூலம் பழகிய இந்த காதலிக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்களை அளித்துள்ளார் ஓம்பிரகாஷ். அவரையும் தற்போது போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.