பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது, இந்த நாட்டிற்கே பிரதமர்.. சீறிய ஹரியானா ஹைகோர்ட்
டெல்லி: மோடி பாஜகவுக்கு மட்டும் பிரதமர் கிடையாது, இந்தியாவுக்கே பிரதமர் என்று கோபமாக கருத்து தெரிவித்துள்ளது பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட்.
தேரா சச்சா தலைவர் ராம் ரஹிமுக்கு எதிரான பாலியல் வழக்கில் அவரை குற்றவாளி என பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் நேற்று அறிவித்தது. இதையடுத்து தேரா சச்சா குண்டர்கள் திடீர் வெறியாட்டத்தில் இறங்கினர்.
இப்படி வன்முறையில் அவர்கள் ஈடுபடுவார்கள் என உளவுத்துறை எச்சரித்திருந்தும்கூட, பல லட்சம் பேரை பஞ்ச்குலா நகருக்குள் அனுமதித்திருந்தது ஹரியானாவின் கட்டார் தலைமையிலான அரசு.
31 பேர் பலியான பரிதாபம்
இதனால் கலவரம் ஆரம்பித்த உடனேயே பாதுகாப்பு படையால் அதை கட்டுப்படுத்த முடியவில்லை. சுமார் 5 மணி நேரங்கள் கலவரம் நீடித்த பிறகு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் கலவரம் சார்ந்த சம்பவங்களில் 3 பெண்கள், 1 குழந்தை உட்பட 31 பேர் உயிரிழந்தனர். பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் சேதமடைந்தன. மீடியாக்காரர்கள் தாக்கப்பட்டு மண்டை உடைக்கப்பட்டது.
மாநில பிரச்சினை
இதுகுறித்த வழக்கை இன்று விசாரித்தது பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட். மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்யா பால் ஜெயின் ஆஜரானார். இது மாநில அரசின் பிரச்சினை என்று அவர் தனது வாதத்தில் குறிப்பிட்டார்.
நீதிமன்றம் கோபம்
இதனால் கோபமைடந்த நீதிபதி "ஹரியானா இந்தியாவில் இல்லையா? ஏன் பஞ்சாப்-ஹரியானா மாற்றாந்தாய் பிள்ளை போல நடத்தப்படுகிறது?" என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜகவுக்கு மட்டுமே மோடி பிரதமர் கிடையாது. அவர் இந்தியா முழுமைக்குமான பிரதமர் என்றும் நீதிமன்றம் கோபம் வெளிப்படுத்தியது.
சரணடைந்த அரசு
முன்னதாக கட்டார் அரசையும் வதக்கி தள்ளியது நீதிமன்றம். நீங்கள் உங்கள் அரசியல் ஆதாயங்களுக்காக நகரத்தை எரிந்து போக அனுமதித்தீர்கள் என்று உயர்நீதிமன்றம் கூறியது. ஹரியானா அரசாங்கம் வன்முறையாளர்களிடம் சரணடைந்துவிட்டதாக தெரிகிறது என்றும் கோர்ட் தெரிவித்தது.