இந்த பேய் தான் என்னை சீரழித்தது: உபேர் டாக்சி டிரைவரை பார்த்து கதறிய இளம்பெண்
டெல்லி: டெல்லி நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளிக்கச் சென்ற இளம்பெண் உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவை பார்த்த உடன் இந்த பேய் தான் என்னை பலாத்காரம் செய்தது என்று அலறியுள்ளார்.
கடந்த மாதம் 5ம் தேதி இரவு டெல்லியில் 25 வயது பெண்ணை உபேர் டாக்சி டிரைவர் ஷிவ் குமார் யாதவ் தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஷிவ் குமாரை டிசம்பர் 7ம் தேதி கைது செய்து 8ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கு டெல்லியில் உள்ள திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
கடந்த மாதம் 8ம் தேதி பாதிக்கப்பட்ட பெண் வாக்குமூலம் அளிக்க திஸ் ஹசாரி நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார். அவர் அறை எண் 247ல் மாஜிஸ்திரேட் ரியா குஹா முன்பு வாக்குமூலம் அளித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அப்போது அறை எண் 264ல் இருந்து வெளியே வந்த ஷிவ் குமாரை பார்த்த அந்த பெண் இந்த பேய் தான் என்னை பாலியல் பலாத்காரம் செய்தது என்று அலறியுள்ளார்.
சம்பவம் நடந்து 19 நாட்கள் கழித்து டிசம்பர் 24ம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 100 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில் போலீசார் 44 சாட்சியங்களை குறிப்பிட்டுள்ளனர். குற்றப்பத்திரிக்கையில் அந்த பெண் ஷிவ் குமாரை பார்த்து அலறிய சம்பவம் பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷிவ் குமார் யாதவின் செயலை அடுத்து டெல்லியில் உபேர் டாக்சிக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.