4 ஆண்டு தண்டனையை எதிர்க்கும் ஜெயலலிதாவின் அப்பீல் - அக். 27ம் தேதிக்கு விசாரணை தள்ளிவைப்பு
பெங்களூர்: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 4 ஆண்டு தண்டனை மற்றும் அபராத்ம் என்ற தீர்ப்பை எதிர்த்து நால்வரும் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் பெங்களூர் தனி நீதிமன்றம் சொத்துக் குவிப்பு வழக்கில் தலா 4 ஆண்டு சிறைத் தண்டனை, ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம் மற்றும் மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டது.
இதையடுத்து நால்வரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நான்கு பேரும் கர்நாடக உயர்நீதிமன்றத்தை அணுகினர். அங்கு கீழ் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும், சொத்து முடக்கத்திற்குத் தடை மற்றும் ஜாமீன் கோரி மனு செய்தனர்.
இதில் நேற்று கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகரா, ஜாமீன் மற்றும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் ஆகிய இரு மனுக்களையும் விசாரித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மற்ற மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 27ம் தேதிக்கு தள்ளிவைத்தும் அவர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே ஜாமீன் மனு கர்நாடகத்தில் நிராகரிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து இன்னும் ஓரிரு நாளில் உச்சநீதிமன்றத்தில் அதிமுக தரப்பு மனு செய்யும் என்று தெரிகிறது.