கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் மழை : காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
கர்நாடகாவில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பெங்களூரு : கர்நாடகாவின் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமான பெய்து வருவதால், கர்நாடக அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
கர்நாடகாவின் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. இதனால் பெங்களூரு, குடகு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
குடகு மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மழை தொடர்ந்து வருவதால், பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தலைக்காவிரி பகுதியில் பெய்த மழையால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கின் காரணமாக கே.ஆர்.எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதே போல், ஹாரங்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இந்த அணைக்கு வினாடிக்கு 295 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது.
கர்நாடக கடலோர மாவட்டங்களான தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகண்டா பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குமாரதாரா, நேத்ராவதி அணைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கர்நாடக கடலோர மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்றும், மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.