பத்ரிநாத்தில் பக்தர்கள் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. இன்ஜினியர் பலி
டேராடூன்: பத்ரிநாத்தில் பக்தர்கள் சென்ற ஹெலிகாப்டர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் ஒரு இன்ஜினியர் பலியான நிலையில், 2 பைலட்டுகள் காயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலம் பத்ரிநாத் கோவிலுக்கு புனித யாத்திரை மேற்கொண்டவர்களை சுமந்து சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஹெலிகாப்டர் இன்ஜினியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் இரு பைலட்டுகள் படுகாயமடைந்தனர்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பத்ரிநாத், ஹரித்துவார், கேதர்நாத் போன்ற புனித ஸ்தலங்களுக்கு பக்தர்கள் செல்வதற்கு சுற்றுலா துறை மூலமாக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த நிலையில், இன்று காலை, 5 பக்தர்கள் மற்றும் இரு பைலட்டுகள், ஒரு இன்ஜினியர் ஆகியோரை சுமந்து கொண்டு பத்ரிநாத்திலிருந்து கேதர்நாத்க்கு ஒரு ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.
ஹெலிகாப்டர் மேல் நோக்கி கிளம்பிய சில நொடிகளிலேயே, காற்றழுத்தம் காரணமாக கீழே தள்ளப்பட்டது. இதனால் ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. அப்போது அதன் றெக்கையில் சிக்கி இன்ஜினியர் பலியானார். மேலும், கான்பூரை சேர்ந்த கோ-பைலட் அல்கா சுக்லா மற்றும் புனேவை சேர்ந்த பைலட் சஞ்சய் வாசி ஆகியோர் காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டரில் இருந்த 5 பக்தர்களும் அதிருஷ்டவசமாக காயமின்றி உயிரோடு தப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.