ஹெலிகாப்டரில் ஆன்மீக சுற்றுலா... திருப்பதியில் விரைவில் தொடக்கம்
திருப்பதியில் ஹெலிகாப்டரில் ஆன்மீக சுற்றுலா வசதி விரைவில் தொடங்கவுள்ளது என்று ஆந்திர சுற்றுலாத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி: உலகப்புகழ்பெற்ற ஆன்மீக திருத்தலமான திருப்பதியில் ஹெலிகாப்டரில் ஆன்மீக சுற்றுலா வசதி விரைவில் தொடங்கவுள்ளது என்று ஆந்திர சுற்றுலாத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பக்தர்கள் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசிக்க நேரில் வருகை தருகிறார்கள். இதனால் நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் திருமலையில் திரள்கிறது.
மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும்வண்ணம் ஹெலிகாப்டர் சேவையை அமல்படுத்துகிறது ஆந்திரமாநில சுற்றுலாத்துறை. இதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பப்பட்டிருந்தது.
இதையடுத்து மத்திய அரசு, ஸ்வதேஸ் தர்ஷன் திட்டத்தின்கீழ், ரூ. 230 கோடியை இதற்காக ஒதுக்கீடு செய்தது. இந்த நிதியிலிருந்து, திருப்பதியில் உள்ள சீனிவாசத்தில், ஹெலிபேட் சுற்றுலா மையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடந்துவருகின்றன.
அந்தப்பணிகள் இன்னும் ஒருசில வாரங்களில் முடிந்து விடும் எனவும், விரைவில் ஹெலிகாப்டரில் சுற்றுலா பயணிகள் வந்து ஏழுமலையானை தரிசிக்கலாம் என்று கூறினர் ஆந்திர சுற்றுலாத்துறை அதிகாரிகள்.