ஹேமமாலினி சென்ற கார் விபத்தில் 5 வயது சிறுமி சாவு.. 3 சட்டப்பிரிவுகளின் கீழ் கார் டிரைவர் கைது
ஜெய்ப்பூர்: விபத்து ஏற்படுத்தி 5 வயது குழந்தையை கொன்ற நடிகையும், பாஜக எம்பியுமான ஹேமமாலினியின் கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.
ஹேமமாலினி பயணித்த மெர்சிடிஸ் பென்ஸ் காரும், ஆல்டோ காரும் மோதிய விபத்தில் 5 வயது சிறுமி உயிரிழந்தது. ஹேமமாலினிக்கு, முகம், கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் ஜெய்ப்பூர் போர்ட்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஹேமமாலினி கார் டிரைவர் மகேஷ் தாக்கூர் மீது, இந்திய தண்டனை சட்டம் 304, 337, 338 ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்கு தொடர்ந்த ஜெய்ப்பூர் போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே சிகிச்சை பெற்றுவரும் ஹேமமாலினியை அவரது மகள் இஷா தியோல் சந்தித்து நலம் விசாரித்தார்.
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே கூறுகையில், விபத்து குறித்து அறிந்து கவலையடைந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்கள் தெரிவிக்கிறேன். உரிய சிகிச்சை மற்றும் நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.