மக்களால் தேர்வு செய்யப்படாமல் மத்திய அமைச்சர் ஆனவர்களின் பட்டியல் இதோ...
சென்னை: மக்களால் தேர்வு செய்யப்படாமல் மத்திய அமைச்சரவையில் பலர் பணியாற்றியுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற பாஜக கூட்டணி அரசு இன்று பதவியேற்கிறது. தனிபெரும்பான்மை பெற்றிருந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கும் அமைச்சர் பதவி வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. அதன்படி இன்று 65 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அமைச்சர் பதவியேற்றவர்களில் முக்கியமானவர் அருண் ஜேட்லி. இவர் அமிருதசரஸ் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதையடுத்து அவரை மாநிலங்களவை உறுப்பினராக்கிய மோடி, மிக முக்கியத்துவம் வாய்ந்த நிதித் துறையை அவருக்கு அளித்தார்.

அமைச்சர்கள்
இது போல் மக்களால் தேர்வு செய்யப்படாமலேயே மத்திய அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் ஏராளம். அதிலும் நிதித்துறை, பாதுகாப்பு துறை, ரயில்வே, சட்டத் துறை ஆகியவற்றின் அமைச்சர்களாக இருந்தவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் அமைச்சர்களாக இருந்துள்ளனர்.

மாநிலங்களவை
கடந்த 2014-ஆம் ஆண்டு மோடி அமைச்சரவையில் அருண் ஜேட்லி மட்டுமல்லாது நிர்மலா சீதாராமன், சுரேஷ் பிரபு, ரவி சங்கர் பிரசாத்,
ஸ்மிருதி இரானி, பிரகாஷ் ஜாவடேகர், பியூஷ் கோயல் ஆகியோர் மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு அமைச்சர்களாகியுள்ளனர்.

பொறுத்திருந்து
அருண் ஜேட்லி உடல்நிலையை காரணம் காட்டி தனக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என கூறிவிட்டார். இதனால் மேற்கண்டவர்களில் யார் யாருக்கு அமைச்சர் பதவி மீண்டும் கிடைக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ராஜ்யசபா எம்பி
அது போல் கடந்த 2004-ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசை பார்த்தோமேயானால் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து தேர்வு செய்யப்பட்டார். அது போல் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த அர்ஜுன் சிங், உள்துறை அமைச்சராக இருந்த சிவ்ராஜ் சிங் பாட்டில், மின்துறை அமைச்சராக இருந்த சுஷில் குமார் ஷிண்டே ஆகியோர் ராஜ்யசபா எம்பிக்களாக இருந்து மத்திய அமைச்சர் ஆனவர்கள்.

இரண்டாவது முறை
இதைத் தொடர்ந்து மன்மோகன் சிங் அரசு மீண்டும் 2009-ஆம் ஆண்டு பொறுப்பேற்றபோது பிரதமர் மன்மோகன் சிங் அல்லாது பாதுகாப்பு துறை அமைச்சராக ஏ கே அந்தோணி, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக ஆனந்த சர்மா, ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்த ஜெய்ராம் ரமேஷ், சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த குலாம் நபி ஆசாத், கப்பல் துறை அமைச்சராக ஜிகே வாசன் , சிறுபான்மைத் துறை அமைச்சராக இருந்த ரஹ்மான் கான் உள்ளிட்டோர் ராஜ்யசபா எம்பிக்களாக இருந்து மத்திய அமைச்சர் ஆனவர்கள்.












Click it and Unblock the Notifications