இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரூ.85 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
அமிர்தசரஸ்: இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் ரூ.85 கோடி மதிப்புள்ள 17 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சிலர் பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் நுழைவதை எல்லை பாதுகாப்பு படையினர் நேற்று இரவு பார்த்துள்ளனர். அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைய வேண்டாம் என்று அவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இருப்பினும் அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை நோக்கி இரண்டு முறை சுட்டனர். இதையடுத்து அவர்கள் இருட்டை பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தானுக்குள் மீண்டும் ஓடிவிட்டனர்.
இந்நிலையில் இன்று காலை அவர்கள் நுழைந்த பகுதியில் சோதனை நடத்தியபோது ரூ.85 கோடி மதிப்புள்ள 17 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது. எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டதால் பாகிஸ்தானியர்கள் ஹெராயினை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர்.