மாட்டிறைச்சி வைத்திருக்கலாம், சாப்பிட கூடாது: மகாராஷ்டிரா ஹைகோர்ட் உத்தரவு
மும்பை: மாட்டிறைச்சி உண்பதற்கு, விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் மகாராஷ்டிரா அரசின் முடிவை மும்பை உயர் நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. அதேநேரம், வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட மாட்டிறைச்சியை வீட்டில் வைத்துக் கொள்வது குற்றமல்ல எனத் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மாட்டிறைச்சி விற்பனைக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. மாட்டிறைச்சி விற்பனை செய்வோருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம், மாட்டிறைச்சி வைத்திருப்போருக்கு ரூ.2000 அபராதமும், ஓராண்டு சிறைத் தண்டனையும் விதிக்கும் சட்டம் அமல் படுத்தப்பட்டது.

இதனை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் சார்பில் பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன. இந்த மனுக்கள் அத்தனையும் மொத்தமாக ஹைகோர்ட்டால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மகாராஷ்டிரா மிருக வதை தடுப்புச் சட்டத்தில் (1976) மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவது, மாட்டிறைச்சி சாப்பிடுவது மட்டுமே தண்டனைக்குரிய குற்றம் என இருப்பதாகவும், மாட்டிறைச்சியை வீட்டில் வைத்திருப்பது குற்றம் என்று அந்த சட்டத்தில் இல்லை எனவும் கூறியுள்ள மும்பை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அபய் ஓகா, எஸ்.சி.குப்தே அடங்கிய அமர்வு, அந்த சட்டத்தின் அடிப்படையில் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மகாராஷ்டிரா மாநிலத்துக்கு வெளியில் கொல்லப்பட்ட மாட்டின் இறைச்சியை (பசு, எருது, எருமை) வைத்திருப்பது குற்றம் என்ற சட்டம் தனிநபர் உரிமை மீறுவது ஆகும்.
எனவே மகாராஷ்டிரா மிருக வதை தடுப்புச் சட்டம் 1976-ன் பிரிவு 5-டி ரத்து செய்யப்படுகிறது. அதேவேளையில், இறைச்சிக்காக மாடுகளை வதை செய்வது, மாட்டிறைச்சி உண்பதற்கு, விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் மகாராஷ்டிரா அரசின் முடிவை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது, என்றனர்.












Click it and Unblock the Notifications