Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஹிஜாப்பை நீக்கிய நிதிஷ்குமார் தந்த அரசு வேலையே வேண்டாம்.. பீகாரை விட்டே கிளம்பினார் பெண் மருத்துவர்

Subscribe to Oneindia Tamil

பாட்னா: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் பொது மேடையில் தனது ஹிஜாப்பை அகற்றச் சொன்னதால் பாதிக்கப்பட்ட மருத்துவர் நுஸ்ரத் பர்வீன், பீகாரை விட்டு வெளியேறி, கொல்காத்தாவில் உள்ள தனது வீட்டுக்கு போய்விட்டார். டிசம்பர் 15 அன்று நடந்த இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அடுத்த நாளே அவர் கொல்காத்தா திரும்பினார். பீகார் அரசுப் பணியில் சேர்வதற்கான தனது முடிவையும் அவர் கைவிட்டுள்ளார்.

படிப்பில் திறமையான மாணவி நுஸ்ரத் பர்வீனுக்கு, மருத்துவர் ஆவது நீண்டநாள் கனவாக இருந்துள்ளது. எனினும், இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அவர், பீகார் திரும்பி அரசுப் பணியில் சேரும் மனநிலையை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் ஆறுதல் கூறி வருகின்றனர். நுஸ்ரத் மீண்டும் பணியில் சேர்வது குறித்த இறுதி முடிவை அவரிடமே விட்டுவிட்டனர்.

nitish kumar

நுஸ்ரத்தின் குடும்பத்திற்கு நெருக்கமானவரும், மூத்த பத்திரிகையாளருமான சஹ்னவாஸ் அக்தர், நுஸ்ரத் பர்வீன், அந்த சம்பவத்திற்குப் பிறகு மன உளைச்சலில் இருப்பதாகத் தெரிவித்தார். டிசம்பர் 15 அன்று நுஸ்ரத் தனது சகோதரரை போனில் அழைத்துப் பேசி ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டாராம். கொல்கத்தாவுக்கு வருமாறு சகோதரர் கூறியதைத் தொடர்ந்து, மறுநாளே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

முதல்வர் வேண்டுமென்று செய்யவில்லை

இச்சம்பவம் குறித்து நுஸ்ரத் தனது மனவேதனையை வெளிப்படுத்தியுள்ளார்: “முதல்வர் வேண்டுமென்றே இதைச் செய்தார் என்று நான் கூறவில்லை, ஆனால் அது எனக்கு அவமானமாக இருந்தது. அங்கு பலர் சிரித்தனர். ஒரு பெண்ணாக, இது எனக்கு வேதனை தந்தது. ஹிஜாப் எங்கள் கலாச்சாரத்தின் ஓர் அங்கம்; அதை அணிந்தே நான் பள்ளி முதல் கல்லூரி வரை படித்தேன். இதற்கு முன் இப்படி ஒருபோதும் நடந்ததில்லை. என் தவறு என்னவென்று புரியவில்லை. அந்த நாளை நினைத்து இன்னும் பயத்தில் உறைந்துவிடுகிறேன்.”

மேலும் அவர் கூறுகையில், “அரசு வேலை கிடைத்தால் பெற்றோருக்கு உதவுவேன் என்று கனவு கண்டேன். ஆனால், இப்போது பாட்னாவில் தங்க எனக்குத் துணிவில்லை. பலர் எதிர்த்தபோதும் என் அப்பா, அம்மா என்னை படிக்க வைத்தார்கள். நேற்றிரவு அப்பாவிடம் பேசினேன்; 'மகளே, உன் மனம் சொல்வதைச் செய்’ என்று அவர் கூறினார். என் குடும்பம் எனக்கு ஆதரவாக உள்ளது. டிசம்பர் 15 அன்று நடந்தது சரியல்ல” என்றார்.

நுஸ்ரத்தின் சகோதரர், “தவறு பிறருடையது என்பதால், அவர் ஏன் வருத்தப்பட வேண்டும் என்று நாங்கள் கூறி சமாதானப்படுத்த முயற்சிக்கிறோம். மற்றவரின் தவறுக்காக அவள் ஏன் வேலையை விட வேண்டும்? அவள் இப்போது மன அதிர்ச்சியில் இருக்கிறாள்,” என்று கூறினார். நுஸ்ரத் பர்வீன் டிசம்பர் 20-ஆம் தேதி பணியில் சேரவிருந்தார்.

நிதிஷ்குமார் செய்தது என்ன?

கடந்த டிசம்பர் 15 அன்று பாட்னாவில் நடந்த நிகழ்வில், முதல்வர் நிதிஷ் குமார் ஆயுஷ் மருத்துவர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கிக் கொண்டிருந்தார். பெண் மருத்துவர் நுஸ்ரத் பர்வீனுக்குக் கடிதத்தை வழங்கிய பிறகு, அவரை உற்று நோக்கினார். மருத்துவரும் புன்னகைத்தார்.

முதல்வர் நுஸ்ரத்தின் ஹிஜாப்பை சுட்டிக்காட்டி “இது என்ன?” என்று கேட்டார். அதற்கு அவர், “ஹிஜாப் சார்,” என்று பதிலளித்தார். “இதை அகற்றுங்கள்,” என்று நிதிஷ் குமார் கூற, அவர் தனது கையாலேயே நுஸ்ரத்தின் ஹிஜாப்பை அகற்றினார். துணை முதல்வர் சாம்ராட் சௌத்ரி, முதல்வரின் சட்டையைக் இழுத்து அவரைத் தடுக்க முயன்றார்.

ஹிஜாப் அகற்றப்பட்டதால் பெண் மருத்துவர் அசௌகரியமடைந்தார். அங்கே சுற்றியிருந்தவர்கள் சிரித்தனர். நிகழ்வில் இருந்த அதிகாரிகள் நுஸ்ரத்திடம் நியமனக் கடிதத்தை மீண்டும் அளித்து, அங்கிருந்து புறப்படுமாறு சைகை செய்தனர். அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

லைவ் நிகழ்ச்சிகளுக்கு தடை

இச்சம்பவத்தைத் தொடர்ந்து, முதல்வர் நிதிஷ் குமாரின் அடுத்தடுத்த நிகழ்வுகளில், ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. டிசம்பர் 20 அன்று கயாஜியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை நிகழ்வும், டிசம்பர் 19 அன்று மின் துறையில் நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்ட நிகழ்வும் நேரலை செய்யப்படவில்லை. இந்த இரண்டு நிகழ்வுகளிலுமே ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

நிதிஷுக்கு ஆதரவாக சர்ச்சை கருத்து

பாட்னாவில் நடந்த இச்சம்பவம் குறித்து உத்தரப் பிரதேச அமைச்சர் சஞ்சய் நிஷாத், பீகார் முதல்வர் நிதிஷ் குமாரைப் பாதுகாக்கும் விதமாகப் பேசினார். “அவரும் ஒரு மனிதர்தானே... முக்காடு அணிந்ததால், தொட்டார், அதைப் பற்றி இவ்வளவு விவாதிக்க கூடாது. இதற்கே இப்படி செய்கிறீர்களே, முதல்வர், தவறுதலாக, வேறு எதையாவது தொட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார். தனது சர்ச்சைக்குரிய பேச்சால் எதிர்ப்பு எழுந்ததால் பிறகு நிஷாத் மன்னிப்பு கோரினார்.

நிதிஷ்குமாருக்கு எதிராக கேஸ்கள்

கவிஞர் முனவ்வார் ரானாவின் மகள் சுமையா ரானா, நிதிஷ் குமார் முஸ்லிம் பெண் ஒருவரின் ஹிஜாப்பை அகற்றியது குறித்தும், சஞ்சய் நிஷாத்தின் “முக்காட்டைத்தானே தொட்டார், வேறு எதையும் இல்லையே” என்ற பேச்சுக்காகவும் போலீசில் புகார் அளித்துள்ளார். இதேபோல், பெங்களூர் வழக்கறிஞர் ஓவைஸ் ஹுசைன் எஸ், முதல்வர் நிதிஷ் குமார் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியுள்ளார்.

பாகிஸ்தானிலிருந்து மிரட்டல்

இந்தச் சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் உள்ள முஸ்லிம் தலைவர்களும் மதகுருமார்களும் நிதிஷ் குமாரைக் கண்டித்தனர். அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத் தலைவர் மௌலானா யாஸூப், “பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் செய்யாததை நிதிஷ் செய்துவிட்டார். அவர் அனைவர் முன்னிலையிலும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று கூறினார். ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, உத்தரப் பிரதேச எம்.பி. இக்காரா ஹசன் உள்ளிட்ட பலரும் மன்னிப்பு கோரினர்.

இதனிடையே, பாகிஸ்தான் தாதா ஷெஷாத் பட்டி, பீகார் முதல்வருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் காணொளி வெளியிட்டு, “முதல்வர் பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், இல்லையெனில் எச்சரிக்கை விடுக்கப்படாமல் செய்துவிட்டோம் என யாரும் எங்களை தப்பாக நினைக்க கூடாது” என்று மிரட்டல் விடுத்தார். இவன் இதற்கு முன்னர் பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய்க்கு மிரட்டல் விடுத்து செய்திகளில் இடம்பிடித்தவர் இவராகும்.

நிதிஷ்குமார் உடம்பு சரியில்லையா?

முதல்வர் நிதிஷ் குமாரின் வினோதமான நடத்தைகள் அவரது உடல்நலம் குறித்த தீவிரமான கேள்விகளை எழுப்பியுள்ளன. இதுமட்டுமின்றி, பிரதமர் நரேந்திர மோடியின் கால்களைத் தொடுவதற்கு முயற்சித்தது, தேசிய கீதம் இசைக்கப்படும்போது சிரித்தது போன்ற முந்தைய விசித்திரமான நடத்தைகளும் இப்போது விவாதிக்கப்படுகின்றன. பீகாரின் முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி), தனது X கணக்கில், “நிதிஷ் ஜிக்கு என்ன ஆயிற்று? மனநிலை மிகவும் பரிதாபகரமான நிலையை அடைந்துள்ளது,” என்று விமர்சித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+