வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்ட 24 மாணவர்கள்... விசாரணைக்கு உத்தரவிட்டதாக ஸ்மிருதி இரானி தகவல்
மனாலி: 24 மாணவர்கள் வெள்ளத்தில் அடித்து சென்ற சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி
ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள வி.என்.ஆர். விஞ்ஞான ஜோதி என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் 50 பேர் கல்வி சுற்றுலாவாக இமாசலபிரதேச மாநிலத்துக்கு சென்றிருந்தனர்.
மாணவர்களில் சிலர் மனாலி-கிராப்துர் சாலையில் உள்ள தலாட் என்ற இடத்தில் உள்ள பியாஸ் ஆற்றின் கரையோரமாக நேற்று மாலை நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது பியாஸ் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த மாணவர்களில் 24 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் இதுவரை 5 மாணவர்களின் உடல்களை மட்டும் மீட்டுள்ளனர்.
சம்பவ இடத்தை மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், சம்பவம் குறித்து செய்தியை அறிந்தவுடன் மாநில அரசிடமும் கல்லூரி நிர்வாகத்திடமும் உடனடியாக பேசியதாகவும் இந்த சம்பவம் பற்றி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.