ஹிஸ்புல்முஜாகிதீன் தலைவர் சையது சலாகுதீனின் மகன் ஷாகித் யூசுப் கைது!
தடை செய்யப்பட்ட ஹிஸ்புல்முஜாகிதீன் இயக்கத் தலைவர் சையது சலாகுதீன் மகன் ஷாகித் யூசுப் இன்று தேசிய பலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார்.
டெல்லி : தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல்முஜாகிதீன் இயக்கத்தின் தலைவர் சையது சலாகுதீனின் மகன் ஷாகித் யூசுப் இன்று தேசிய புலனாய்வு அமைப்பினரால் கைது செய்யப்பட்டார். 2011ம் ஆண்டில் தீவிரவாத அமைப்பிடம் இருந்து நிதி பெற உதவியதாக கைது செய்யப்பட்டார்.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியத்தால் தீவிரவாத இயக்கம் என அறிவித்து, தடை செய்யப்பட்டிருக்கும் ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்கத்தின் தலைவர் சையது சலாகுதீன். இவர் கடந்த 26ஆம் தேதி அமெரிக்காவால் சர்வதேச பயங்கரவாதி என பிரகடனம் செய்யப்பட்டுள்ளார். இவரது மகன் சையது ஷாகித் யூசுப் ஜம்மு காஷ்மீரில் அரசின் விவசாயத் துறையில் உதவி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

கடந்த 2011ம் ஆண்டு பாகிஸ்தான், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து அந்நிய செலாவணி பணம் பெற்று தீவிரவாத அமைப்புகளுக்கு உதவியதாக யூசுப் மீது புகார் எழுந்தது. மேலும் அரேபியாவைச் சேர்ந்த ஹிஸ்புல்முஜாகிதீன் அமைப்பின் தீவிரவாதி அஜாஸ் என்பவருடன் யூசுப் தொடர்பில் இருந்து பணத்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
2011 முதல் 2014 காலகட்டத்தில் 4 தவணைகளாக பணம் யூசுப்பிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இந்தப் பணத்தை காஷ்மீரில் தீவிரவாத செயல்களுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதும் தெரிய வந்தது. இந்த விவகாரம் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. யூசுப் அரேபிய தீவிரவாதியிடம் பேசிய தொலைபேசி அழைப்பு ஆதாரங்களும் உள்ளன.
இதன் அடிப்படையில் இன்று தேசிய புலனாய்வு அமைப்பு ஷாகித் யூசுப்பை ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியது. இதை தொடர்ந்து விசாரணைக்கு ஆஜரான ஷாகித் யூசுப் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications